இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், டெல்லி அணியின் நட்சத்திர வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் கடைசியாக நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு தான் இந்த கொரோனா கால கட்டத்தில் தனது குடும்பத்துடன் இருக்க விரும்புவதாக கூறி இந்த ஐபிஎல் தொடர் பாதியிலிருந்து விலகினார்.
கொரோனா வைரஸ்க்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் நான் அவர்களுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று கூறி அஸ்வின் விலகியதால் டெல்லி அணி நிர்வாகமும் அவரது விலகலுக்கு சம்மதித்தது. மேலும் அப்போது அஸ்வின் விலகலுக்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழம்பினர்.
இந்நிலையில் தற்போது அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அஸ்வினின் மனைவி ப்ரீத்தி அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது : ஒரே வாரத்தில் எனது குடும்பத்தில் உள்ள 6 பெரியவர்கள் மற்றும் 4 சிறியவர்கள் என 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
Feeling ok enough to croak a tiny hi to all of you.6 adults and 4 children ended up testing+ the same week,with our kids being the vehicles of transmission – the core of my family,all down with the virus in different homes/hospitals..Nightmare of a week.1 of 3 parents back home.
— Wear a mask. Take your vaccine. (@prithinarayanan) April 30, 2021
குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் மூலம் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகள், வீடுகள் என தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். இந்த வாரம் எங்களுக்கு மிகவும் மோசமான வாரம். தொற்றால் பாதிக்கப்பட்டதில் ஒருவர் குணம் அடைந்துள்ளார். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது மட்டுமே இந்த தொற்றுக்கு எதிராக போராட ஒரே வழி.
கொரோனாவில் இருந்து வெளிவர உடல் வலிமையை விட, மன வலிமை வேண்டும். இந்த தொற்றில் இருந்து வெளிவர 5 முதல் 8 நாட்கள் மிக கடினமாக இருந்தது. தயவு செய்து முக கவசம் அணியுங்கள், தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என அவர் குறிப்பிட்டு இந்த பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.