இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். அப்படி சி.எஸ்.கே அணியில் இணைந்த அவர் துவக்க வீரராக விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் தடுமாறிய அவர் அதன் பின்னர் மிகச் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி இரண்டு சதங்களை அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக சென்னை அணியின் முக்கிய வீரராகவும் அவர் பார்க்கப்பட்டு வருகிறார்.
அதிவேக இந்திய வீரராக சஞ்சு சாம்சன் நிகழ்த்திய சாதனை :
ஏற்கனவே 7 லீக் ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ள சென்னை அணி இன்று தங்களது எட்டாவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியின் போது சென்னை அணியின் துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 15 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அப்படி அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து இருந்தாலும் இந்த போட்டியில் 3 ரன்களை தொட்ட போது ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக சுரேஷ் ரெய்னா, கே.எல் ராகுல் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரை பின்னுக்கு தள்ளி சஞ்சு சாம்சன் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அப்படி அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான அவர் இன்று விளையாடும் போட்டியுடன் சேர்த்து 185 போட்டிகளில் 5000 ரன்களை ஐ.பி.எல் போட்டிகளில் பூர்த்தி செய்தார். ஏற்கனவே இந்திய அணி சார்பாக சில வீரர்கள் 5000 ரன்களை கடந்திருந்தாலும் அதிவேகமாக 5000 ரன்களை கடந்த வீரராக சுரேஷ் ரெய்னா 3620 பந்துகளுடன் முதலிடத்தில் இருந்தார். அவரது சாதனையை தற்போது முறியடித்து சஞ்சு சாம்சன் 3555 பந்துகளில் 5000 ரன்களை கடந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : எம்.எஸ் தோனிக்கு மீண்டும் இடமில்லை.. ஆனால் மற்றொரு இளம் அதிரடி வீரருக்கு இடம் – விவரம் இதோ
ரெய்னாவுக்கு அடுத்து கே.எல் ராகுல் 3688 பந்துகளிலும், எம்.எஸ் தோனி 3691 பந்துகளில் 5000 ரன்களை கடந்தும் அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களை அடித்த மூன்றாவது வீரராகவும் ஏ.பி.டி மற்றும் வார்னர் ஆகியோருக்கு அடுத்து சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



