ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க உள்ளது. அந்தத் தொடரில் இந்தியாவுக்கு சென்று தங்களது போட்டிகளை விளையாட மாட்டோம் என்று வங்கதேசம் அறிவித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் இந்து மக்கள் மேலே நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் இயற்கை எய்தியதாக செய்திகள் வெளிவந்தன. அதற்கு இந்தியாவைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அத்துடன் வங்கதேச வீரர் முஸ்தஃபீசூர் ரஹ்மான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடக்கூடாது என்ற எதிர்ப்புகளும் வந்தன. எனவே பிசிசிஐ அறிவுறுத்தலின் பேரில் 9.20 கோடிகளுக்கு வாங்கப்பட்ட ரஹ்மானை கொல்கத்தா நிர்வாகம் தங்களது அணியிலிருந்து விடுவித்தது வங்கதேச ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. அதற்கு பதிலடியாகவே இந்தியாவுக்கு சென்று உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள வங்கதேசம் தங்களது நாட்டில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பவும் தடை விதித்துள்ளது.
இந்தியாவின் கைக்குள்:
அது மட்டுமின்றி தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதிக்குமாறு ஐசிசி அமைப்புக்கு வங்கதேசம் கோரிக்கை வைத்தது. ஆனால் கடைசி நேரத்தில் வங்கதேச போட்டிகளை இலங்கையில் மாற்றுவதில் சிக்கல் இருப்பதாக ஐசிசி கருதுகிறது. எனவே ஒன்று இந்தியாவில் விளையாடுங்கள் அல்லது விளையாடாமல் எதிரணிகளிடம் புள்ளியை இழக்கத் தயாராகுங்கள் என்று வங்கதேசத்திற்கு ஐசிசி பதிலளித்துள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கதேசம் மீண்டும் அதே கோரிக்கையை வைத்துள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பலரும் வங்கதேசத்துக்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர். குறிப்பாக விதிமுறைகளை மீறுவதையே வாடிக்கையாக வைத்துள்ள இந்தியாவுக்கு 2026 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை பதிலடி பரிசாக கொடுப்போம் என்று பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அஜ்மல் விளாசல்:
இந்நிலையில் ஐசிசி அமைப்பை இந்தியா தங்களது கைக்குள் போட்டுக்கொண்டு அண்டை நாடுகளுக்கு எதிராக குடைச்சல் கொடுப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் விமர்சித்துள்ளார். மறுபுறம் அதைக் கண்டிக்க வேண்டிய ஐசிசி இந்தியர்களால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். எனவே ஒருதலைப்பட்சமாக செயல்படும் ஐசிசி அமைப்பு தேவையில்லை என்று விமர்சிக்கும் அஜ்மல் இது பற்றி பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: எவ்ளோ பாராட்டுனாலும் அது இவருக்கு கம்மிதான்.. விராட் கோலியின் இன்னிங்க்ஸ் குறித்து – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி
“ஐசிசி அமைப்பால் இப்போதெல்லாம் உலக கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த நலனுக்காக பாரபட்சமற்ற மற்றும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. ஐசிசி தனது முடிவுகளை இந்திய வாரியத்தில் அமல்படுத்த முடியாவிட்டால் அதன் இருப்பு தேவையற்றது. பாகிஸ்தானுக்கு வந்து இந்தியா விளையாடாமல் இருக்க தர்க்கரீதியாக எந்தக் காரணமும் இல்லை. ஆனால் ஐசிசி இப்போது இந்தியர்களால் ஆதிக்கம் செலுத்துவதால் உதவியற்றதாக உள்ளது” என்று கூறினார்.



