இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷிவம் துபே கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை வென்ற போது முக்கிய வீரராக இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியிருந்தார். ஆனாலும் அதன் பின்னர் காயமடைந்த அவர் கடந்த சில தொடர்களாகவே இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த வேளையில் இளம் வீரர்கள் அந்த இடத்தை நிரப்பி வந்தனர்.
போட்டியின் பாதியிலேயே வெளியேறிய ஷிவம் துபே :
இதன் காரணமாக ஷிவம் துபேவுக்கு மீண்டும் டி20 அணியில் கம்பேக் கொடுக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் நிதீஷ் ராணா காயமடைந்து வெளியேறியதன் காரணமாக அவருக்கு மீண்டும் கம்பேக் வாய்ப்பு கிடைத்தது.
அந்தவகையில் ஷிவம் துபே இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் கம்பேக் கொடுத்திருந்தார். ஆனாலும் மூன்றாவது டி20 போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்காவது டி20 போட்டியில் மீண்டும் இடம் பிடித்தவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தார்.
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வாஷிங்க்டன் சுந்தருக்கு பதிலாக இடம்பிடித்த அவர் இந்த போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் ஏழாவது வீரராக களமிறங்கி 34 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 53 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றது. இருந்தாலும் இந்த போட்டியின் போது முதலில் இந்திய அணி விளையாடுகையில் 20-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தலையில் காயமடைந்த அவர் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் அவருக்கு கன்கஷன் பரிசோதனை செய்யப்பட்டு மூளை அழற்சி இருப்பதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க : பிசிசிஐ விருதுகள் 2024: சச்சின், அஸ்வின், பும்ரா, மந்தனாவுக்கு ஸ்பெஷல் விருதுகள்.. வெளியான அறிவிப்பு
இதன் காரணமாக அவர் இந்த போட்டியின் முதல் பாதியோடு பிளேயிங் லெவனிலிருந்து வெளியேறினார். பின்னர் அவருக்கு பதிலாக இந்த போட்டியில் அவருக்கு மாற்று வீரராக கன்கஷன் விதிமுறைப்படி ஹர்ஷித் ராணா விளையாடியது குறிப்பிடத்தக்கது.



