இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68-வது லீக் போட்டியானது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்கிற சூழ்நிலையில் இருந்த வேளையில் பெங்களூரு அணி வெற்றி பெற்று நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
அதன்படி நடைபெற்ற முடிந்த இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்று முதலில் சென்னை அணி பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை குவித்தது.
பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்ததால் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த தொடரில் 42 வயதான சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் காரணமாக நிச்சயம் தோனி அடுத்த சீசனிலும் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தோனி அடுத்த ஆண்டும் ரசிகர்களுக்காக விளையாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக வளர்த்தெடுத்த தோனி அடுத்த சீசனிலும் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ராஜஸ்தானின் கனவை கலைத்த மழை.. ஆர்சிபியுடன் மோதுவது யார்? பிளே ஆஃப் அட்டவணை இதோ
இருப்பினும் தோனி என்ன முடிவினை எடுப்பார் என்பது அவரிடம் உள்ளது. ஆனாலும் சென்னை மைதானத்தில் தான் கடைசி போட்டியில் விளையாடுவேன் என்று தோனி ஏற்கனவே தெரிவித்ததால் நிச்சயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாடிவிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் தான் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



