இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துவக்க ஆட்டக்காரராக இருந்த ப்ரிதிவி ஷா 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தவர். அதன் காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு மிக இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியிருந்தார். அப்போது அவரை பலரும் பெரியளவில் பாராட்டியும் இருந்தனர்.
அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ப்ரித்வி ஷா அறிமுகமாகி இருந்தாலும் காலப்போக்கில் அவரது பேட்டிங் ஃபார்ம் சரிவை சந்தித்தது. அதோடு ஐபிஎல் தொடரிலும் அவர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்திய அணி அவரை முற்றிலுமாக கழட்டி விட்டது.
இருப்பினும் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கம்பேக் கொடுப்பதற்காக பிரத்வி ஷா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு இங்கு நடக்கும் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து இங்கிலாந்துக்கு சென்ற அவர் அங்கு நடக்கும் கவுண்டி போட்டிகளிலும் சதத்திற்கு மேல் சதம் அடித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
அப்படி மீண்டும் அவரது பயணம் சிறப்பாக சென்று கொண்டிருந்த வேளையில் காயத்தை சந்தித்த அவர் கடந்த ஆறு மாதங்களாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது காயத்திலிருந்து மீண்ட அவர் முறையான பயிற்சிகளுக்கு பிறகு தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக கம்பேக் கொடுத்துள்ளார்.
அப்படி அவர் கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே சத்தீஸ்கர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார். அந்தவகையில் இந்த போட்டியில் 185 பந்துகளை சந்தித்து 18 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 159 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதையும் படிங்க : ஜெயசூர்யாவின் 24 வருட சாதனையை தூளாக்கிய நிஷாங்கா.. ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சரித்திர சாதனை
அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக மும்பை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்களை குவித்துள்ளது. இப்படி மீண்டும் சதம் அடித்து பார்முக்கு திரும்பிய பிரிதிவி ஷா ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாடப் போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது குறிப்பிடத்தக்கது.