ஐ.பி.எல் தொடரின் 48 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக வார்னர் 81 ரன்களும், மனிஷ் பாண்டே 36 ரன்களையும் குவித்தனர்.
இதனால் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 167 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 79 ரன்களை அடித்தார். இதனால் ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய அஸ்வின் கூறியதாவது : கடந்து போன போட்டிகளை பற்றி நினைப்பதற்கு ஒன்றும் இல்லை. நடக்கும் போட்டிகளில் நமது கவனத்தை வைத்து முன்னே செல்ல வேண்டும். இந்த தொடரில் இதுபோன்று நடந்தது கிடையாது இருப்பினும் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் எங்கள் அணி சிறப்பாக ஆடியது. இந்த மைதானத்தில் 195-200 ரன்கள் வரை எட்டக்கூடிய இலக்குதான்.
நாங்கள் சேசிங் செய்யும் போது பவர்பிளே ஓவர்களில் நன்றாக ஆடவில்லை. பிறகு ராகுல் நன்றாக ஆடினார். 180 ரன்கள் வரை எங்களால் சேசிங் செய்து இருக்க முடியும் ஆனால் இன்றைய நாள் எங்களுடையது இல்லை தோல்வியை யோசித்து கலங்க வேண்டிய நேரம் இது இல்லை. தோல்வியை மறந்து முன்னோக்கி செல்ல வேண்டிய நேரம் இது என்று அஸ்வின் பேசினார்.