ஐபிஎல் 2023 : அடுத்த ஆண்டு கோப்பையை வெல்ல ராஜஸ்தான் தக்க வைக்க வேண்டிய 7 வீரர்களின் பட்டியல் இதோ

RR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையில் ஆரம்பம் முதலே லீக் சுற்றில் சீரான வெற்றிகளைப் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி குவாலிபயர் 1 போட்டியில் குஜராத்திடம் தோற்றாலும் குவாலிபயர் 2 போட்டியில் பெங்களூருவை தோற்கடித்து 2008க்கு பின் 13 வருடங்கள் கழித்து பைனலுக்கு சென்றது. இருப்பினும் இறுதிப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தபோதிலும் சேசிங் செய்யாமல் முதலில் பேட்டிங் செய்து சொதப்பிய அந்த அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத்திடம் தோல்வியடைந்து 13 வருடங்கள் கழித்து கோப்பையை முத்தமிட கிடைத்த பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.

இருப்பினும் ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையில் 2008இல் சாம்பியன் பட்டம் வென்றதை தவிர பெரும்பாலான வருடங்கள் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கே திணறிய நிலையில் இம்முறை பைனல் வரை முன்னேறியதால் இந்த சீசன் சிறப்பாகவே அமைந்தது. பைனல் வரை வந்து கோப்பையை நெருங்கிய அந்த அணி தோல்வியடைந்தாலும் அப்படியே விட்டு விடாமல் அடுத்த வருடம் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை முத்தமிட மீண்டும் போராட உள்ளது. அதற்காக 2023 சீசனில் அந்த அணி தக்கவைக்க வேண்டிய 6 வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. சஞ்சு சாம்சன்: கடந்த வருடம் முதல் கேப்டனாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் இந்த வருடம் 14 கோடிக்கு முதல் வீரராக தக்க வைக்கப்பட்ட நிலையில் 17 போட்டிகளில் 458 ரன்களை 146.79 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் குவித்து சுமாராகவே செயல்பட்டார். பெரும்பாலான போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை பெற்ற அவர் அதை பெரிய ரன்களாக மாற்றியிருந்தால் 600க்கும் மேற்பட்ட ரன்களை அடித்திருப்பார்.

இருப்பினும் அதை சிறப்பான கேப்டன்ஷிப் வாயிலாக ஈடு செய்த அவர் வார்னேவுக்கு பின் 13 வருடங்கள் கழித்து ராஜஸ்தானை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்த பெருமையைப் பெற்றுள்ளார். எனவே முன்னேற்றமடையும் இவரை அந்த நிர்வாகம் மீண்டும் முதல் ஆளாக தக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

2. ஜோஸ் பட்லர்: இந்த வருடம் 10 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட ஜோஸ் பட்லர் 20 கோடிக்கு தகுதியாகும் அளவில் லீக் சுற்றிலும் நாக்-அவுட் சுற்றிலும் ரன் மழை பொழிந்து மொத்தம் 4 சதங்கள் 4 அரைசதங்கள் உட்பட 863 ரன்களை 57.53 என்ற அற்புதமான சராசரியில் 149.05 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். இந்த வருடம் பல கோடிகளை வாங்கி சுமாராக செயல்பட்ட பல வீரர்களுக்கு மத்தியில் வாங்கிய சம்பளத்திற்கு இரு மடங்கு சிறப்பாக செயல்பட்டவர் என்றால் அது இவர் மட்டுமே.

மேலும் சஞ்சு சாம்சன் போன்ற இதர பேட்ஸ்மென்கள் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்க தவறிய நிலையில் அவர்களுக்கும் சேர்த்து ரன்களை விளாசிய இவர் ராஜஸ்தான் பைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றியவர். எனவே அடுத்த வருடம் இவரை தக்கவைக்காமல் போனால் அது நியாயமே கிடையாது.

- Advertisement -

3. யுஸ்வென்ற சஹால்: 2013 – 2021 வரை தங்களுக்காக பந்துவீசிய இப்படி ஒரு தங்கமான பவுலரை கோட்டை விட்டு விட்டோமே என்று பெங்களூரு வருந்தும் அளவுக்கு ராஜஸ்தானுக்காக இந்த வருடம் 6.50 கோடிக்கு விளையாடிய முதல் சீசனிலேயே தனது கேரியரில் உச்சபட்சமாக 17 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை எடுத்த இவர் ஊதா தொப்பியை வென்று சாதனை படைத்தார்.

ஹாட்ரிக் உட்பட ஏராளமான சாதனைகளை படைத்து ராஜஸ்தானின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டு வந்த இருவரையும் அந்த அணி நிர்வாகம் சந்தேகமின்றி தக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

4. ட்ரெண்ட் போல்ட்: சஹால் போலவே இவரைப் போய் விட்டு விட்டோமே என்று மும்பை வருந்தும் அளவுக்கு இம்முறை முதல் முறையாக ராஜஸ்தானுக்காக 8 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் 16 போட்டிகளில் 16 விக்கெட்களை 7.94 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்தார்.

பவர்பிளே ஓவர்களில் பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுக்கும் திறமையான இடதுகை பந்து வீச்சாளரான இவரை தவறிப்போய் கூட ராஜஸ்தான் வெளியே விட்டு விடக்கூடாது.

5. பிரசித் கிருஷ்னா: 10 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் 17 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை எடுத்து போல்ட் உடன் ஜோடியாக 2-வது வேகப்பந்து வீச்சாளராக அசத்தினார்.

இளம் வீரராக இருக்கும் இவர் ஒருசில போட்டிகளில் தடுமாறினாலும் பெரும்பாலும் அட்டகாசமாக பந்து வீசினார். எனவே வேகப்பந்து வீச்சு துறை வலுவாக இருப்பதற்கு இவரை ராஜஸ்தான் தக்கவைக்க வேண்டியுள்ளது.

6. சிம்ரோன் ஹெட்மயர்: ராஜஸ்தான் அணியின் மிடில் ஆர்டரில் ஒரே நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் இவரை விட்டால் அந்த அணியின் மிடில் ஆர்டர் மோசமாக மாறிவிடும்.

இந்த வருடம் 8.50 கோடிக்கு 15 போட்டிகளில் 314 ரன்களை 153.92 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் அடித்த இவர் அந்த அணியின் பினிஷராகவும் இருப்பதால் நிச்சயமாக தக்கவைக்க வேண்டும்.

7. ரவிச்சந்திரன் அஷ்வின்: இந்த வருடம் ஒரு அணி நிர்வாகம் ஒரு வீரரை அனைத்து வகைகளிலும் பயன்படுத்திக் கொண்டது என்றால் அது 5 கோடிக்கு வாங்கப்பட்ட இவராகத்தான் இருப்பார். ஏனெனில் இவரின் பேட்டிங் திறமையை நம்பி அந்த அணி நிர்வாகம் நிறைய போட்டிகளில் 3-வது இடத்தில் பட்லருடன் பேட்டிங் செய்ய அனுப்பி வெற்றி கண்டது. காரணம் 2009 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவர் இந்த வருடம் தான் முதல் அரை சதமடித்து களமிறங்கிய 12 இன்னிங்சில் அதிக பட்சமாக 191 ரன்களை 141.48 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளாசினார்.

அதேபோல் பந்துவீச்சில் 17 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை 7.51 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்த இவர் அதில் சற்று முன்னேற்றத்தை காண வேண்டியுள்ளது. இருப்பினும் இவரை ராஜஸ்தான் தாராளமாக அடுத்த வருடமும் தக்க வைக்கலாம்.

Advertisement