இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவுக்காக கடந்த 2005 முதல் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனனாக எத்தனையோ போட்டிகளில் தாங்கிப்பிடித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர். குறிப்பாக 2011 உலக கோப்பையை வெல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்ட இவர் ஐபிஎல் தொடரில் 2008 முதல் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து எதிரணி பவுலர்களை பிரித்து மேய்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை வென்றுள்ள 4 கோப்பைகளின் வெற்றிகளுக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டார் என்றே கூறலாம்.
அதிலும் ஐபிஎல் தொடரில் ஒரு காலத்தில் எதிரணி பவுலர்கள் நடுங்கும் அளவுக்கு அதிரடி சரவெடியாக பவுண்டரிகளை பறக்கவிட்டு ரன்களை சேர்க்கும் டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக ரன்களையும் சாதனைகளையும் படைத்ததாலேயே இவரை வல்லுநர்கள் மிஸ்டர் ஐபிஎல் என்று போற்றுகிறார்கள். 2018 வரை ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்திருந்த இவரை அதன்பின் பார்மை இழந்ததால் சென்னை அணி நிர்வாகம் மொத்தமாக கழற்றி விட்டது. அதனால் நிறைய ரசிகர்கள் கொந்தளித்த நிலையில் நிதர்சனத்தை புரிந்து கொண்டு இந்த வருடம் வர்ணனையாளராக செயல்பட்ட சுரேஷ் ரெய்னா 33 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று தற்சமயம் 35 வயது மட்டுமே நிரம்பியவராக உள்ளார்.
5 மாஸ் சாதனைகள்:
அதனால் மேலும் சிலவருடங்கள் தமக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டில் விளையாடலாம் என்று முடிவெடுத்த அவர் செப்டம்பர் 10 முதல் துவங்கும் ரோட் சேஃப்டி தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜெண்ட்ஸ் அணியில் விளையாடி மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். இந்த நிலைமையில் மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் படைத்துள்ள யாராலும் அவ்வளவு எளிதில் உடைக்க முடியாத சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:
5. 7 பவுண்டரிகள்: பொதுவாக கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 பந்துகள் மட்டுமே என்ற நிலைமையில் அதில் அனைத்து பந்துகளிலும் பவுண்டரிகளை அடிப்பது கடினமாகும். அந்த நிலையில் 2014இல் நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக 227 ரன்களை துரத்திய சென்னைக்கு டு பிளேஸிஸ் அவுட்டானதும் களமிறங்கி எரிமலையாக வெடித்த சுரேஷ் ரெய்னா பவிந்தர் அவான்னா வீசிய 6வது ஓவரில் நோ-பாலையும் சேர்த்து 6, 6, 4, 4, 4, 4, 4 என 32 ரன்களை வெளுத்து வாங்கினார்.
அந்த வகையில் அந்த ஒரே ஓவரில் 7 பவுண்டரிகளை அடித்த அவரை தவிர இதுவரை வேறு யாருமே 7 பவுண்டரிகளை அடித்ததில்லை. வருங்காலங்களில் அதை அடிப்பதும் அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது.
4. பவர்பிளே கிங்: பொதுவாக பவர்ஃபிளே ஓவர்களில் அதிரடியாக ரன்களை சேர்த்து அந்த பயனை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது பேட்ஸ்மேன்களின் கடமையாகும். அந்த வகையில் அதே இன்னிங்சில் வெறும் முதல் 6 ஓவர்களிலேயே 87 ரன்கள் குவித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
கிட்டத்தட்ட சதத்தை நெருங்கிய அவருக்கு அடுத்தபடியாக ஆடம் கில்கிறிஸ்ட் 74 ரன்களை 2009இல் டெல்லிக்கு எதிராக அடித்திருந்தார். அந்த வகையில் இந்த சாதனையை யாராலுமே உடைக்கக் முடியாது என்று தைரியமாக சொல்லலாம்.
3. முரட்டு ஸ்ட்ரைக்ரேட்: டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் குவிப்பது முக்கியமாகும். அந்தவகையில் மீண்டும் அதே இன்னிங்சில் வெறும் 25 பந்துகளில் 87 ரன்களை 348.00 என்ற முரட்டுத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் ரெய்னா வெளுத்து வாங்கினார்.
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் (குறைந்தது 18 பந்துகள்) அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவித்த பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் 327.27 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2வது இடத்தில் யூசுப் பதான் உள்ளார்.
4. பகுதிநேர பவுலிங்: சுரேஷ் ரெய்னா பகுதிநேர பந்துவீச்சாளருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக தனது கேரியரில் செயல்பட்டார். அதிலும் 2011ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 3 பந்துகளை வீசிய ரெய்னா கடைசி 2 விக்கெட்டுகளை எடுத்தார். அப்போட்டியில் வெறும் 1.5 என்ற குறைவான ஸ்டிரைக் ரேட்டில் பந்து வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் குறைந்த பவுலிங் ஸ்டிரைக் ரேட்டில் பந்துவீசிய பவுலர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இதை இந்த வருடம் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கொல்கத்தாவின் சார்பில் ஆண்ட்ரே ரசல் கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை 1.5 என்ற பவுலிங் ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து சமன் செய்தாலும் முறியடிக்க முடியவில்லை.
5. பிளேஆப் கிங்: பொதுவாக எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் லீக் சுற்றில் செயல்படுவது அனைவருக்குமே எளிதானது. ஆனால் அழுத்தமான நாக்-அவுட் சுற்றில் செயல்படுவது கடினமாகும். அந்த வகையில் ஐபிஎல் போன்ற அழுத்தத்திலும் அழுத்தம் நிறைந்த பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் சுரேஷ் ரெய்னா சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க : IND vs SL : நாங்க செய்ஞ்ச இந்த தவறு தான் தோல்விக்கு காரணம். இலங்கை போட்டிக்கு பிறகு – ரோஹித் பேசியது என்ன?
24 ப்ளே ஆஃப் போட்டிகளில் 714 ரன்களை எடுத்து முதலிடத்தில் இருக்கும் அவருக்கு அடுத்தபடியாக எம்எஸ் தோனி 522 ரன்களுடன் உள்ளார். இன்னும் ஓரிரு வருடங்களில் அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்ற நிலைமையில் 3வது இடத்தில் இருக்கும் வாட்சன் (389) ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டதால் இந்த சாதனையை வருங்கால பேட்ஸ்மேன்கள் உடைப்பது கடினமாகும்.