சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சில வீரர்களை பார்த்தால் இவர்களும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி உள்ளார்களா என்பது போல் நமக்குத் தோன்றும். அந்த வகையில் இந்தியாவிலன் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், முகமது கைஃப் போன்ற பல வீரர்கள் பட்டியலில் உள்ளனர். தற்போது அப்படிப்பட்ட சர்வதேச வீரர்கள் ஐந்து பேரைப் பற்றி பார்ப்போம். இதில் சில அதிரடி வீரர்களும் ஒருசில டெஸ்ட் போட்டிகளே விளையாடி காணாமல் போயுள்ளனர்.
ஷர்ஜீல் கான் :
இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் சர்ச்சைகளுக்கு இடையே வளர்ந்தவர். 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது பிக்ஸிங் செய்து மாட்டியவர். அதன்பின்னர் 3 வருடம் கழித்து மீண்டும் அந்த தொடரில் விளையாடி சர்ச்சையை ஏற்படுத்தியவர். இவர் 2013ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அதன்பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2016ஆம் ஆண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடினார். ஆனால் பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை. தற்போது இவர் பாகிஸ்தான் அணியில் இடம் இல்லாமல் தவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது சேஷாத் :
வளர்ந்துவரும் அணிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் அணி. திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் தனது திறமையை காண்பித்து டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணி ஆப்கானிஸ்தான். இந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது சேஷாத். இவருக்கு தற்போது 33 வயதாகிறது. இவர் 84 ஒருநாள் போட்டிகளிலும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதன் பின்னர் இந்திய அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி தனது கிரிக்கெட் வரலாற்றின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியது. அப்போது இவர் டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக களமிறங்கினார். மொத்தம் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 69 ரன்கள் மட்டுமே எடுத்தார். தற்போது இவரும் அந்த அணியில் இடம் இல்லாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
காலின் முன்ரோ :
இவர் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவர். இடதுகை வீரரான இவர் நியூசிலாந்து அணியின் டி20 அணியில் நிரந்தர இடம் பிடித்து துவக்க வீரராக இருந்து வரும் இவர் டி20 போட்டிகளில் 4 சர்வதேச சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். டி20 போட்டிகளில் அதிரடியாக பெயர் போனவர். டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளார் என்பது ஆச்சரியம்தான். இவர் 2013ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ஆனால், பெரிதாக இவரால் சாதிக்க முடியவில்லை. மொத்தம் அந்த டெஸ்ட் போட்டியில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பின்னர் இவரது டெஸ்ட் கனவு கலைந்துவிட்டது.
கிளென் மேக்ஸ்வெல் :
ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்று கருதப்பட்டவர். ஆனால் காயங்களும் கேப்டன்களும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடி விட்டார்கள் என்பதே நிதர்சனம். பெரிதும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிரடியாக ஆடக்கூடியதில் வல்லவர். இவரும் டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 2013 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான இவர் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 339 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்ட்ரே ரசல் :
இந்த பட்டியல் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வீரர் இவர்தான். டி20 அசுரனான இவர் 20 ஓவர் போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலாக தயாரான ஒரு வீரர் போன்று இருப்பார். அதிரடியாக ஆடக்கூடியதில் வல்லவர். ஆனால் இவரும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடியுள்ளார். 10 வருடங்களுக்கு முன்னர் கடந்த 2010ஆம் ஆண்டு இவர் 21 வயது இருக்கும் போது இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். ஆனால் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிந்து விட்டது. அந்த போட்டியில் வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்தது குறிப்பிடத்தக்கது.