வலது கை பேட்ஸ்மேனாக மாறி ஃபோர் அடித்த வார்னர்.. சிரித்த ஆஸி அணியினர்.. அடுத்த ஓவரிலேயே மாஸ் காட்டிய அஸ்வின்

Ashwin and Warner.jpeg
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2வது போட்டியிலும் 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. குறிப்பாக இந்தூரில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 399/5 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக சுப்மன் கில் 104, ஸ்ரேயாஸ் ஐயர் 105, கேஎல் ராகுல் 52, சூரியகுமாரி யாதவ் 72* ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைக்க உதவினர். சுமாராக பந்து வீசிய ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 400 ரன்களை துரத்தி ஆஸ்திரேலியாவுக்கு மேத்தியூ ஷார்ட் 9, ஸ்டீவ் ஸ்மித் 0 ரன்களில் பிரசித் கிருஷ்ணா வேகத்தில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

அஸ்வின் பதிலடி:
அந்த சூழ்நிலையில் மழை வந்ததால் 33 ஓவரில் 317 என்ற புதிய இலக்கை மீண்டும் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு நிதானத்தை வெளிப்படுத்த முயற்சித்த மார்னஸ் லபுஸ்ஷேனை 27 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கி ரவிச்சந்திரன் அஸ்வின் மேஜிக் செய்தார். ஆனால் எதிர்ப்புறம் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் இடது கை பேட்ஸ்மேன்களை தெறிக்க விடுவார் என்பதை தெரிந்து அஸ்வினை வலது கை பேட்ஸ்மேனாக மாறி எதிர்கொண்டு பவுண்டரியை அடித்தார்.

அப்போது பெவிலியனிலிருந்த ஆஸ்திரேலிய அணியினர் சிரித்த நிலையில் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மீண்டும் சாதூரியமாக செயல்பட முயற்சித்த வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக துவங்கி திடீரென இடது கை பேட்ஸ்மேனாக மாறி அஷ்வினை சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். ஆனால் அந்த சமயத்தில் சரியான லைனை வீசியதால் தவறாக கணித்த வார்னரை 53 ரன்களில் எல்டபிள்யூ முறையில் அவுட்டாக்கி பதிலடி கொடுத்த அஸ்வின் அடுத்ததாக வந்த ஜோஸ் இங்லீஷையும் 6 ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அவர்களைத் தொடர்ந்து வந்த அலெக்ஸ் கேரி 14, கேமரூன் கிரீன் 19 ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட பின்னடைவில் கடைசியில் சீன் அபௌட் 54 ரன்கள் எடுத்தும் 28.2 ஓவரிலேயே ஆஸ்திரேலியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு அபார வெற்றி பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இந்தியா விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பியுள்ளது 2023 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Advertisement