IND vs AUS : முதல் டி20 போட்டிக்கான தனது 11 பேர் இந்திய அணியை வெளியிட்ட வாசிம் ஜாபர், டிகே – பண்ட் ஆகியோரில் வாய்ப்பு யாருக்கு

Jaffer
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 20ஆம் தேதியன்று துவங்கியது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையிலும் முன்னோட்டமாகவும் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு டி20 உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்திக்க காரணமாக செய்த தவறுகளை இந்த தொடரில் திருத்திக்கொள்ள களமிறங்குகிறது. மேலும் பொதுவாகவே சொந்த மண்ணில் நடைபெறும் இதுபோன்ற இருதரப்பு தொடர்களில் சொல்லி அடிக்கும் அணியாக கருதப்படும் இந்தியா இந்த தொடரிலும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மறுபுறம் விரைவில் சொந்த மண்ணில் உலக கோப்பையை தக்க வைக்க களமிறங்கும் ஆஸ்திரேலியா அதற்கு முன்பாக தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு கை பார்த்து இந்த கோப்பையை வெல்வதற்கு கடுமையான சவாலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த தொடரின் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது. முன்னதாக உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே இடம் பிடித்துள்ளதால் 11 பேர் அணியில் விளையாடப் போவது யார் என்ற மிகப் பெரிய விவாதம் இந்திய வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

சான்ஸ் யாருக்கு:
அதில் அறிமுகமான 2017 முதல் 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளை பெற்று இதுவரை மனதில் நிற்கும் அளவுக்கு டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படாத ரிஷப் பண்ட்டுக்கு பெரும்பாலான ரசிகர்கள் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கே எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்களுடைய 11 பேர் அணியில் சேர்ப்பதை பார்க்க முடியவில்லை. ஆனாலும் கௌதம் கம்பீர் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள், கேப்டன், பயிற்சியாளர், அணி நிர்வாகம், தேர்வுக் குழு என அனைவரும் அவருக்கு ஆதரவை கொடுத்து 11 பேர் அணியில் தேர்வு செய்து வாய்ப்பு கொடுக்கிறார்கள்.

மறுபுறம் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக செயல்பட்டதால் கேரியர் முடிந்து விட்டதாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் தம்மால் டி20 உலக கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐபிஎல் 2022 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்தார். அதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் அசத்தலாக செயல்பட்ட அவர் 37 வயதுக்குப் பின் அதிக ரன்கள் மற்றும் 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரராக சாதனை படைத்து சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கிறார்.

- Advertisement -

தரமான டிகே:
மேலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் இவரை கழற்றி விட்டு ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கொடுத்த அணி நிர்வாகத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் சூப்பர் 4 சுற்றில் சந்தித்த தோல்விகளுக்கு குறைவாக எடுத்த 15 – 20 ரன்களை அடிக்கக் கூடிய தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் என்று கருதும் நிறைய ரசிகர்கள் தங்களுடைய 11 பேர் அணியில் அவருக்கு முதன்மை விக்கெட் கீப்பராக இடம் கொடுக்கின்றனர்.

இந்நிலையில் மொஹாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் களமிறங்கும் தன்னுடைய சிறந்த 11 பேர் இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக்கை முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ள அவர் ரிஷப் பண்ட்டை கழற்றி விட்டுள்ளார். முன்னதாக ராகுலுடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்குவதை பார்க்க விரும்புவதாக தெரிவித்திருந்த வாசிம் ஜாபர் இந்த அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

அவருடைய 11 பேர் அணியில் கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வென்ற சஹால் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள தமிழக ரசிகர்கள் மொஹாலியில் நடைபெறும் போட்டிக்கான முதன்மை அணியில் தினேஷ் கார்த்திக்க்கு கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பளிப்பாரா என்று எதிர்பார்க்கின்றனர்.

Advertisement