- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2023 உ.கோப்பையில் பண்ட் – சாம்சன் ஆகியோரில் இடம் யாருக்கு – இப்போதே சரியான கருத்தை சொல்லும் முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் விளையாடி 2வது கோப்பையை வெல்வதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட இடம் பெறாதது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. ஏனெனில் 2015இல் அறிமுகமாகி 2019இல் 2வது போட்டியில் விளையாடிய அவருக்கு 2021 வரை ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டும் நிலையான தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் 2022 சீசனில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அதன் பின் வாய்ப்பு பெற்ற அயர்லாந்து தொடரில் முதல் முறையாக அரைசதம் அடித்து 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு பங்காற்றினார்.

ஆனாலும் சீனியர்கள் வந்ததால் தொடர்ச்சியான வாய்ப்பை பெறாத அவர் அதைத் தொடர்ந்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டார். ஆனாலும் அவருக்கு டாட்டா காட்டிய தேர்வுக்குழு வழக்கம் போல டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் இப்பொது வரை சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட்டை மீண்டும் உலக கோப்பையில் தேர்வு செய்தது. அதனால் ஏற்பட்ட ரசிகர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக சஞ்சு சாம்சன் இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக நடந்த அந்தத் தொடரில் பேட்டிங்கில் அசத்திய அவர் கேப்டனாக 3 – 0 (3) என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்ததால் கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் தேர்வானார்.

- Advertisement -

2023 உலககோப்பை:
அதில் முதல் போட்டியில் 83* ரன்கள் குவித்து கிட்டத்தட்ட இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் எஞ்சிய 2 போட்டிகளில் 30*, 2* என கடைசி வரை அவுட்டாகாமல் 118 ரன்களைக் குவித்து மீண்டும் அசத்தினார். அதனால் டி20 உலக கோப்பையில் வாய்ப்பு போனாலும் அடுத்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பையில் விளையாடுவதற்கு அவர் தயாராகி வருகிறார். இந்நிலையில் ஆரம்ப காலங்களில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறிய சஞ்சு சாம்சன் தற்போது அதில் முன்னேறியுள்ளதால் ஒருநாள் உலக கோப்பையில் விளையாடும் தகுதியை எட்டியுள்ளதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் பாராட்டியுள்ளார்.

அதே சமயம் டி20 கிரிக்கெட்டில் அப்போதும் இப்போதும் சொதப்பி வரும் ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் முதல் முறையாக சதமடித்து 125 (113) ரன்களை விளாசி இந்தியா தொடரை வெல்ல உதவியை மறக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்றும் இருவருமே விளையாட தகுதியானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போது சஞ்சு சாம்சன் நிச்சயமாக என்னை அதிகமாக கவர்ந்துள்ளார். ஆரம்ப காலங்களில் தொடர்ச்சியாக செயல்படாததால் அவரது இடத்தில் எனக்கு கேள்விக்குறி இருந்தது. ஆனால் இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டார். முதல் போட்டியில் கிட்டத்தட்ட இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் எஞ்சிய போட்டிகளில் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்தினார். அதே சமயம் இங்கிலாந்தில் தொடரை வெல்ல உதவிய ரிஷப் பண்ட்டின் சதத்தை நாம் எளிதாக மறந்து விட்டோம் என்று நினைக்கிறேன்”

“ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அவர் சதமடித்தார். மேலும் டி20 கிரிக்கெட்டில் 4, 5 என அனைத்து இடங்களிலும் அவர் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்படுகிறார். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு போட்டியாக யாருமில்லை என்று நான் நினைக்கிறேன். அத்துடன் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வார் என்பதாலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படுகிறார் என்பதாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் நீக்கப்பட வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. அதனால் தற்சமயத்தில் விளையாடுவதை வைத்து உலக கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் இருக்கலாம். ஆனால் அதற்காக ரிஷப் பண்ட் நீக்கப்பட கூடாது” என்று கூறினார்.

- Advertisement -
Published by