இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட தயாராகிக்கொண்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதிலும் குறிப்பாக பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி மேட்ச் வின்னிங் இன்னிங்சை விளையாடினார்.
அவரது இந்த சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டும் அசத்தலாக இருந்ததால் அவர் நிறையவே பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர், சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக அவரை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது.
முதல் முறை வாக்காளரான வாஷிங்டன் சுந்தர், இளம் வாக்காளர்கள் தேர்தலில் பங்களிப்பை செலுத்த ஊக்கமாக இருப்பார் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- ‘இது நம்ம இன்னிங்ஸ்’ என்ற ஹேஸ்டேக் மூலம் வாஷிங்டன் சுந்தர் நியமனம் தொடர்பாக வீடியோவுடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Vanakkam Chennai, you guessed him right!
We are glad to announce @Sundarwashi5 as the District Election Icon of #NammaChennai
Let’s gear up for 💯% Participation & Ethical Voting🗳 #IthuNammaInnings pic.twitter.com/G029bo1XqH
— Greater Chennai Corporation (@chennaicorp) January 24, 2021
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு சென்னை திரும்பிய அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட நாள் தனிமைக்கு பிறகு சென்னை முழுவதும் இளம் வாக்காளர்களை கவர நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் வாஷிங்டன் சுந்தர் ஆன்லைன் மூலம் பங்கேற்க உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் சுந்தர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.