இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளுக்கும் இடையே இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன் குவிப்பை அளித்தால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றிபெற முடியும் என்பதற்காக துவக்கத்திலிருந்தே இந்திய அணி அதிரடியாக விளையாடியது. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்கள், விராட்கோலி 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
மேலும் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் நான்காவது வீரராக இறங்கிய ஹார்டிக் பாண்டியா ஆகியோரும் அதிரடியாக 30 ரன்களுக்கு மேல் குவிக்க இந்திய அணி 20 ஓவர்களில் 224 ரன்கள் என்ற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. அதை தொடர்ந்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி பட்லர் மற்றும் மலான் ஆகிய இருவர் களத்தில் இருக்கும் வரை ஓரளவு நம்பிக்கையுடன் இருந்தது. பட்லர் 52 ரன்களும், மலான் 68 ரன்கள் எடுத்து வெளியேற அதன் பின்னர் தோல்வி உறுதி செய்யப்பட்டது.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 188 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக புவனேஸ்வர் குமார் இருந்தார் என்றால் அது மிகை அல்ல.
ஏனெனில் தொடக்க வீரரான ஜேசன் ராய் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆக்கியது மட்டுமின்றி ஒரு கட்டத்தில் மலான் மற்றும் பட்லர் ஆகியோர் இந்திய அணியின் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியாக விளையாடி வந்த வேளையில் பட்லரை அவுட் ஆக்கியதும் சரி இப்படி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி 4 ஓவர்கள் வீசி அவர் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த அவருக்கு “மேன் ஆப் தி மேட்ச்” விருது வழங்கப்பட்டது. அவரின் இந்த சிறப்பான பந்துவீச்சிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
In a high scoring game and on a batting paradise to give away just 16 runs in 4 overs and picking 2 wkts including the dangerous Jos Butler is just a phenomenal performance. @BhuviOfficial is well and truly back💪💪 #INDvENG
— VVS Laxman (@VVSLaxman281) March 20, 2021
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லட்சுமணனும் தனது ட்விட்டர் பக்கத்தில் புவனேஸ்வர் குமாரை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள கருத்தில் ” இப்படி ஒரு ஹைஸ்கோரிங் போட்டியில் அதுவும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒரு அற்புதமான திறன். புவனேஸ்வர் குமார் மீண்டும் தனது சிறந்த நிலைக்கு வந்துள்ளார் என்று அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.