ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் மூன்றாம் தேதி நடைபெற்ற 15ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா 80 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் அதைத் துரத்திய ஹைதராபாத் சுமாராக பேட்டிங் செய்து 120 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிசான், நிதிஷ் ரெட்டி என அந்த அணியின் முக்கிய வீரர்கள் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 27, க்ளாஸென் 33 ரன்கள் எடுத்தனர். இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் ஹைதராபாத் தங்களுடைய பெரியத் தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனைப் படைத்தது.
மோசமான தோல்வி:
பொதுவாகவே அடித்து நிற்கக்கூடிய அந்த அணி இந்த வருடம் முதல் போட்டியில் 286 ரன்கள் அடித்து சாதனை படைத்தது. அதனால் தொடர்ந்து அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹைதராபாத் அடுத்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் ஹைதெராபாத் இப்படி மோசமாக தோற்று பெயரை கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு கொல்கத்தா பிட்ச் மோசமாக இல்லை என்று வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.
கொஞ்சம் ஸ்லோவாக இருந்த பிட்ச்சில் நிதானத்தை காட்டியிருந்தால் எளிதாக வென்றிருக்க முடியும் என்று தெரிவிக்கும் சேவாக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பஞ்சாப் அணி போல தற்போது ஹைதராபாத் இருக்கிறது. முதலில் 190 ரன்களை எடுத்து தோற்ற அவர்கள் பின்னர் 160 ரன்களை அடித்து தோற்றனர். தற்போது அவர்களால் 200 ரன்களை துரத்த முடியவில்லை”
சேவாக் விமர்சனம்:
“கொல்கத்தா அணியின் பவுலிங் அட்டாக் செய்யும் அளவுக்கு இல்லை. அதே போல பிட்ச் மோசமாகவும் இல்லை. கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்த பிட்ச்சில் பந்து அதிகமாக சுழலவில்லை. பவுலர்களுக்கு அதிகமான ஆதரவும் இல்லை. கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. அது போன்ற சூழ்நிலைக்கு நீங்கள் கொஞ்சம் உங்களை அட்ஜஸ்ட் செய்து களத்தில் நீண்ட நேரம் விளையாடினால் வெற்றிப் பெறலாம்”
இதையும் படிங்க: எம்.எஸ் தோனி எனக்கு ஒரு அப்பா மாதிரி மட்டுமில்ல.. கடவுள் மாதிரி – மதீஷா பதிரானா நெகிழ்ச்சி
“அதை செய்யாத ஹைதராபாத் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அவர்களிடம் இருக்கும் பேட்ஸ்மேன்கள் யாருமே சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அவர்கள் 120க்கு ஆல் அவுட்டானார்கள். ஆம் இந்தப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. ஆனால் ஹைதராபாத் அணிக்கு அதிரடியாக விளையாடி பொழுது போக்கக்கூடிய அணி என்ற பெயர் இருக்கிறது. அப்படிப்பட்ட அணி ரசிகர்களுக்கு இங்கே ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது” எனக் கூறினார்.