
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பை வரை விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ள அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் வருங்கால வீரர்களுக்கு வழி விட்ட அவர்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலங்களாக தடுமாற்றமாக விளையாடிய அவர்கள் விமர்சனங்களை சந்தித்தனர். அதனால் கடந்த இங்கிலாந்து தொடருக்கு முன் அவர்கள் தாமாகவே டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளனர்.
இருப்பினும் அப்போது 38, 40 வயதில் அவர்களால் அசத்த முடியுமா என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விடத் துவங்கியுள்ளது. அதனாலேயே கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலைகளைத் துவங்கியுள்ளது. இந்நிலையில் எப்போது ஓய்வு பெற்றாலும் விராட் கோலி, ரோஹித் சர்மாவை டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் போல பிசிசிஐ ஃபேர்வெல் போட்டியை நடத்தி வழியனுப்ப வேண்டும் என்று மதன் லால் கேட்டுக் கொண்டுள்ளார்.
1983 உலகக் கோப்பை வென்ற முன்னாள் இந்திய வீரரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரோஹித், விராட் ஆகியோரிடம் இன்னும் நிறைய ஆட்டம் எஞ்சியுள்ளது. அவர்கள் அனைவருடைய கண்களும் கலங்கும் வகையில் ஃபேர்வெல் போட்டியில் விடை பெறுவதற்கு தகுதியானவர்கள். குறிப்பாக ஃரபேல் நடால் ஓய்வு பெற்றதை இந்த உலகம் பார்த்தது போல அவர்களும் விடை பெற வேண்டும்”
“அதே போல இந்தியா அவர்களை கௌரவிக்க வேண்டும். ஏனெனில் அவர்களைப் போன்ற வீரர்கள் தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வருவார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி தன்னுடைய சௌகரியமான சூழ்நிலையை விட்டு வெளியே வந்து விளையாட வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அனைத்தையும் கொடுத்தவர்”
இதையும் படிங்க: ஃபெராரி கார் தங்க நட்சத்திரம் போன்ற விராட் கோலிக்கு.. இதான் அடுத்த டார்கெட்.. ஹைடன் பாராட்டு
“தன்னுடைய ஆர்வம், ஃபிட்னெஸ், சாதிக்க வேண்டும் என்ற பசி ஆகியவை அவரை உயர்தரமான வீரராக தீர்மானிக்கிறது. தற்சமயத்தில் அவர் மனதளவில் வழுவாக இருக்க வேண்டும். ஓய்வு என்பது அவருடைய சொந்த முடிவு. இருப்பினும் 36 வயதிலேயே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக அமைந்தது” என்று கூறினார்.