இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2008 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடித்தார். அப்போதிலிருந்து கடந்த 15 வருடங்களாக அணிகளை சொல்லி அடித்து வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
அத்துடன் 26000+ ரன்கள் 80 சதங்கள் அடித்துள்ள அவர் 35 வயதிலேயே ஜாம்பவானுக்கு நிகரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கரை முந்தி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள், 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் குவித்த அவர் மகத்தான உலக சாதனைகளையும் படைத்துள்ளார். அதே வேகத்தில் சச்சினின் 100 சதங்கள் சாதனையையும் அவர் முறியடிப்பார் என்று நம்பப்படுகிறது.
ஆம்ப்ரோஸ் பாராட்டு:
இருப்பினும் தற்போது 2 புதிய பந்துகள், டிஆர்எஸ் போன்ற அடிப்படை விதிமுறைகள் பேட்டிங்க்கு சாதகமாக உள்ளது. எனவே சச்சினுடைய காலத்தில் விளையாடியிருந்தால் விராட் கோலி இவ்வளவு ரன்கள் அடித்திருக்க முடியாது என்று விமர்சனங்கள் காணப்படுவது வழக்கமாகும். அத்துடன் 90களில் ஜிம்பாப்வே அணியில் கூட தரமான பவுலர்கள் இருந்தனர். எனவே பவுலர்கள் ராஜாங்கம் நடத்திய காலகட்டங்களில் அவர்களை சிறப்பாக எதிர்கொண்ட சச்சின் தான் எப்போதும் மகத்தான பேட்ஸ்மேன் என்று ஒருத்தரப்பு பேசுவது வழக்கமாகும்.
அதனால் விராட் கோலி எப்போதும் அவரை நெருங்க முடியாது என்றும் ஒரு தரப்பினர் பேசுவது வாடிக்கையாகும். இந்நிலையில் 1990 உட்பட எந்த காலங்களில் விளையாடினாலும் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டிருப்பார் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் வீரர் கர்ட்லி ஆம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி ஸ்போர்ட்ஸ் டக் பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“விராட் கோலி நான் விரும்பிப் பார்த்து ரசிக்கக்கூடிய மகத்தான மனிதர். அவரை சச்சினுடன் ஒப்பிடச் சொல்லாதீர்கள். அவர் சிறப்பான வீரர் என்பது எனக்கு தெரியும். ஆனால் வெவ்வேறு தலைமுறைகளில் விளையாடி வீரர்களை எப்படி மதிப்பிட முடியும். இது போன்ற விஷயங்களை நான் எப்போதும் செய்வதில்லை. ஆனால் சிறப்பான பேட்ஸ்மேன்களை பார்க்கும் போது அவர்களை மதிப்பிட முடியும்”
இதையும் படிங்க: இந்தியா ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? – விவரம் இதோ
“எடுத்துக்காட்டாக தற்போதைய கிரிக்கெட்டை விராட் கோலி டாமினேட் செய்து வருகிறார். என்னுடைய காலத்தில் அல்லது எனக்கு முந்தைய காலத்தில் அவரால் சிறப்பாக விளையாட முடியுமா என்ற கேள்வியை எனக்கு நானே கேட்பேன்? இருப்பினும் தன்னுடைய மகத்துவத்தால் அவர் அனைத்து காலங்களிலும் அசத்தியிருப்பார் என்று நான் நம்புகிறேன். சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் மகத்தான பேட்ஸ்மேன்கள். அவர்கள் எந்த காலத்திலும் டாமினேட் செய்வார்கள்” என்று கூறினார்.



