நானும் மனுஷன் தான் எல்லை மீறி போறீங்க, ரசிகரின் செயலால் மனமுடைந்த விராட் கோலி – நடந்தது என்ன

Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்ற வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 15 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்து அசத்தியது. அதனால் நாக் அவுட் சுற்று வாய்ப்பு பிரகாசமான நிலையில் 3வது போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்தியா 5 விக்கெட் போராடி தோற்று ஏமாற்றத்தை கொடுத்தது.

பெர்த் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே ரோஹித் சர்மா உட்பட டாப் 5 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 49/5 என தடுமாறிய இந்தியாவை தனி ஒருவனாக சூரியகுமார் 68 (48) ரன்கள் குவித்து காப்பாற்றினார். அதை துரத்திய தென்ஆப்பிரிக்காவும் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்து 24/3 என தடுமாறினாலும் ஐடன் மார்க்கம் 52* ரன்களும் டேவிட் மில்லர் 59* ரன்களும் குவித்து வெற்றி பெற வைத்தனர். இதனால் அரையிறுதிக்கு செல்ல எஞ்சிய கிரிக்கெட் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

எல்லை மீறிய செயல்:
முன்னதாக இந்த உலகக் கோப்பையில் முதலிரண்டு போட்டிகளில் அபாரமாக விளையாடி வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இப்போட்டியில் பேட்டிங்கில் 12 (11) ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பீல்டிங்கில் முக்கிய கேட்ச் விட்டு தோல்விக்கு காரணமாக அமைந்ததால் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். ஆனால் இப்போட்டியை முடித்துக் கொண்டு தன்னுடைய ஹோட்டல் அறைக்கு சென்ற அவருக்கு மேலும் ஒரு ஏமாற்றமும் அதிர்ச்சியும் காத்திருந்தது.

ஆம் அப்போட்டிக்காக இந்திய வீரர்கள் தங்கியிருந்த “கிரௌன் ரிசார்ட்ஸ்” எனும் ஹோட்டலில் பணிபுரியும் ஒரு தீவிர விராட் கோலி ரசிகர் அவர் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவரது அனுமதியின்றி அவரது அறைக்குள் நுழைந்து என்னென்ன உடைமைகளை பயன்படுத்துகிறார் உள்ளிட்ட மொத்த ரூமையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதைப் போட்டி முடிந்ததும் அறிந்த விராட் கோலி அதிர்ச்சியடைந்து என்னதான் ரசிகர்கள் தன் மீது அன்பு கொண்டிருந்தாலும் தன்னடைய அந்தரங்க விஷயத்தில் இப்படி அத்துமீறி நடந்து கொள்வது வேதனையளிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும் என்பதையும் அவர்களை சந்திப்பதில் உற்சாகமடைவார்கள் என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். அதை நான் எப்போதும் பாராட்டுகிறேன். ஆனால் இங்குள்ள இந்த வீடியோ (ரசிகர் வெளியிட்டது) பயங்கரமானது. இது எனது தனியுரிமையை பற்றி நான் மிகவும் சித்தப்பிரமையாக உணர வைக்கிறது. என்னுடைய சொந்த ஹோட்டல் அறையில் எனக்கு தனியுரிமை இல்லையென்றால் தனிப்பட்ட இடத்தை நான் எங்கே எதிர்பார்க்க முடியும்? இந்த வகையான வெறித்தனம் மற்றும் தனி உரிமை மீதான முழுமையான ஆக்கிரப்பு செயல்களை நான் விரும்பவில்லை”

“தயவு செய்து மக்களின் தனி உரிமைக்கு மதிப்பளிக்கவும் அவர்களை பொழுதுபோக்கிற்கான பண்டமாக கருத வேண்டாம்” என்று மனமுடைந்து எழுதியுள்ளார். இதை இந்தியாவில் இருந்து பார்த்த அவரது மனைவி அனுஷ்கா சர்மா அதிர்ச்சியடைந்து தாமும் இது போன்ற நிகழ்வுகளை சந்தித்ததாகவும் ஒருவரது பெட்ரூமில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பது ரசிகர்களுக்கான செயல் அல்ல என்றும் கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து நிறைய ரசிகர்கள் அந்த ஹோட்டல் நிர்வாகத்தை சாடினார்கள். அதை அறிந்த ஹோட்டல் நிர்வாகம் அந்த நபர் யார் என்பதை உடனடியாக கண்டறிந்து அவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளதுடன் இந்த நிகழ்வுக்காக விராட் கோலியிடம் வெளிப்படையான மன்னிப்பையும் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement