கொரோனா காலகட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கிட்டத்தட்ட ஆறு ஏழு மாதங்கள் எந்த ஒரு கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து பின்னர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய தொடர் மற்றும் இந்தியாவில் முதல் முறையாக இங்கிலாந்து தொடர் ஆகியவற்றில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த காலகட்டத்தில் இந்திய வீரர்கள் பலர் தங்களது ஓய்வு அறிவித்தனர்.
குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் தோனி, ரெய்னா ஆகிய முன்னணி வீரர்களும் அதனைத் தொடர்ந்து மனோஜ் திவாரி, பிரக்யான் ஓஜா ஆகியோர் ஓய்வை அறிவித்தனர். அதனை தொடர்ந்து நேற்று திடீரென இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யூசப் பதான் ஓய்வு முடிவை அறிவித்து இருந்தார். அதோடு நில்லாமல் தற்போது இந்திய அணியின் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த வினய் குமார் திடீரென அவரது ட்விட்டர் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்துள்ள வினய் குமார் கடந்த 2010ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டியிலும் அறிமுகமாகி இருந்தார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2012ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும் அவர் அறிமுகம் ஆகியிருந்தார். இந்திய அணிக்காக 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 38 விக்கெட்டுகளையும், 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10 விக்கெட்டுகளையும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணியில் தொடர்ச்சியாக அவர் விளையாடா விட்டாலும் அவ்வப்போது இந்திய அணியில் பங்கேற்று விளையாடி இருந்தார். மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த வீரரான வினய் குமார் உள்ளூர் கிரிக்கெட்டில் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்தார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் 105 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 105 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் தற்போது திடீரென அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சரி, ஐ.பி.எல் போட்டிகளிலும் சரி அவருக்கு வாய்ப்பு இல்லை என்ற காரணத்தினாலும் 37 வயது அவர் அடைந்து விட்டாலும் இந்த ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். மேலும் இது குறித்த லெட்டர் பதிவினை அவர் பிசிசிஐக்கு அனுப்பியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வினய் குமார் :
Thankyou all for your love and support throughout my career. Today I hang up my boots. 🙏🙏❤️ #ProudIndian pic.twitter.com/ht0THqWTdP
— Vinay Kumar R (@Vinay_Kumar_R) February 26, 2021
“உங்கள் அனைவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று தனது ஓய்வு அறிவிப்பை சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த இந்திய வீரர்களின் இந்த ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.