இலங்கை அணிக்கெதிரான தொடரில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்கு காரணம் இதுதான் – விவரம் இதோ

Nattu
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்கு செல்லவிருக்கிறது.
இந்திய அணியின் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, ரவீந்தீர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய முன்னனி வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கு பெற இங்கிலாந்திற்கு சென்றுள்ளதால், இலங்கைக்கு எதிரான தொடர்ரில் இளம் வீரர்கள் கொண்ட இரண்டாவது இந்திய அணி களமிறங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

Sl

- Advertisement -

எனவே இந்த தொடரில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணியை நேற்று அறிவித்திருக்கிறது பிசிசிஐ. இந்த பட்டியலில் தமிழக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த வீரரான தங்கராசு நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் குழம்பி வருகின்றனர் தமிழக ரசிகர்கள்.

கடந்த ஆஸ்திரேலிய தொடரின்போது இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசி அசத்தியிருந்தார் நடராஜன். அதற்குப் பிறகு இங்கிலாந்து தொடரில் சில போட்டிளில் மட்டும் விளையாடிய அவருக்கு, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அவர், பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகடாமியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதற்குப் பிறகு அவர் உடல் நலம் தேறி வந்தாலும், இன்னும் முழுமையாக ஃபிட்டாகவில்லையென்று தெரிகிறது. எனவேதான் அவருக்கு இலங்கை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிய வந்திருக்கிறது.

Nattu

எதிர்வரும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டும் இந்திய தேர்வுக் குழுவானது இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கக்படுகிறது. ஏனெனில் டி20 உலக கோப்பை தொடரில் அவர் இந்திய அணியின் முக்கியமான பௌலராக இருப்பார் என்ற காரணத்தினால் ஐபிஎல் தொடரில் அவர் காயமடைந்தபோது, அவரை அணியில் இருந்து விடுவித்து சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை தாமாகவே முன்வந்து ஐதராபாத் அணி நிர்வாகத்திடம் வைத்திருந்தது பிசிசிஐ.

Nattu

இந்த தொடரில் இடம்பெறாத நடராஜன் அடுத்து வரும் ஐபிஎல்லின் இரண்டாவது பாதி தொடரில் சிறப்பாக பந்து வீசி, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி ஜூலை மாதம் 13ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த சுற்றுப் பயணத்தின் கடைசி போட்டியான மூன்றாவது டி20 போட்டியானது ஜூலை மாதத்தின் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. கொரானா பரவல் காரணமாக இந்த போட்டிகள் அனைத்தும் கொழும்பு மைதானத்தில் மட்டுமே நடைபெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement