IND vs NZ : சூரியகுமார் கொடுத்த எனர்ஜி டானிக்கில் பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா – நியூஸிலாந்தை மண்ணை கவ்வ வைத்தது எப்படி

Kane Willamson IND vs NZ
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்கும் புதிய முயற்சியாக கருதப்படும் இத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டி நவம்பர் 20ஆம் தேதி மௌன்ட் மௌங்கனி நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு வித்தியாச முயற்சியாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 6 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மற்றொரு தொடக்க வீரர் இசான் கிசானும் 5 பவுண்டரி 1 சிக்ருடன் 36 (31) ரன்களில் தடுமாறி அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 13 (9) ரன்களில் நடையை கட்டினாலும் மறுபுறம் 3வது இடத்தில் களமிறங்கிய சூரியகுமார் வழக்கம் போல களமிறங்கிய முதல் பந்திலிருந்தே 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அசத்தல் வெற்றி:
அவரை கட்டுப்படுத்த கேப்டன் கேன் வில்லியம்சன் போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடு பொடியாக்கிய அவர் நியூசிலாந்து பவுலர்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாமல் மைதானத்தில் நாலாபுறங்களிலும் சுழன்றடித்து ரசிகர்களை மகிழ்வித்து சதமடித்தார். ஆனால் மறுபுறம் அவரை வேடிக்கை பார்த்த கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 13 (13) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டாக்கிய டிம் சவுதி ஹாட்ரிக் விக்கெட்களை சாய்த்தார்.

இருப்பினும் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கி சூரியகுமார் 11 பவுண்டரி 7 சிக்சருடன் 111* (51) ரன்களை விளாசி இந்தியாவை 20 ஓவர்களில் 191/6 ரன்கள் எடுக்க உதவினார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 192 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு முதல் ஓவரிலேயே புவனேஸ்வர் குமாரிடம் ஃபின் ஆலன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சனுடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 2வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 3 பவுண்டரியுடன் 25 (22) ரன்களில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே அதிரடி வீரர் கிளென் பிலிப்ஸை 12 (6) ரன்களில் சஹால் காலி செய்ததால் போட்டி இந்தியாவின் கட்டுக்குள் கொண்டு வந்தது. ஏனெனில் மிடில் ஓவர்களில் டார்ல் மிட்சேல் 10 (11) ஜேம்ஸ் நீசம் 0, மிட்சேல் சாட்னர் 2 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் அடுத்தடுத்த ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்று போராடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 4 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 61 (52) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

இப்போட்டியில் பேட்டிங்கில் இதர வீரர்கள் அனைவரும் திண்டாடிய போது தனி ஒருவனாக விஸ்வரூபம் எடுத்து சதமடித்த சூரியகுமார் யாதவ் 150 ரன்களை கூட தொடுமா என்று கருதப்பட்ட இந்தியாவை 191 ரன்கள் குவிக்க வைத்து பலப்படுத்தினார். அந்த தைரியத்தில் சமீபத்திய உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாத இந்திய பவுலர்கள் இப்போட்டியில் முதல் ஓவரிலிருந்தே சீரான இடைவெளிகளில் முக்கிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை பெரிய ரன்களை எடுக்க விடாமல் அவுட்டாக்கி வெற்றியை உறுதி செய்தனர்.

அப்படி வலுவான நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்த்த இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா உலகக்கோப்பை தோல்வியிலிருந்து மீண்டெழுந்து வெற்றி பாதைக்கு பயணிக்க துவங்கியுள்ளது.

Advertisement