போன முறையே என்னுடைய பவுலிங்கை கொலை பண்ணிட்டாரு, இம்முறை என்ன ஆகுமோ – இந்திய வீரரால் புலம்பும் மொய்ன் அலி

Moeen Ali
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்ததால் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதிப் போட்டியில் குரூப் 1 புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்த இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அதில் வெல்வதற்காக அப்போட்டி நடைபெறும் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் வெற்றி நடைக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக ரன்களைக் குவித்து கருப்பு குதிரைகளாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெரும்பாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியாக மைதானத்தின் நாலாபுறங்களிலும் சுழன்றடிக்கும் சூரியகுமார் யாதவ் மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை விளாசி வருகிறார்.

- Advertisement -

போன முறையே:
அதிலும் தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியே தடுமாறிய நிலையில் அவர் மட்டும் வேறு ஏதோ பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் விளையாடுவது போல் அபாரமாக செயல்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இந்த வருடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000* ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்து உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் அபாரமாக செயல்படுவார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

ஏனெனில் கடைசியாக கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்று கோப்பையை கைப்பற்றிய இந்தியா 3வது போட்டியில் 216 ரன்களை சேசிங் செய்யும் போது 31/3 என தடுமாறி தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆனால் அப்போது தனி ஒருவனாக சிங்கத்தைப் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் 14 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 117 (55) ரன்களை விளாசிய போதிலும் இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

இந்நிலையில் அப்போட்டியில் தம்மிடம் கடைசியில் அவுட்டாவதற்கு முன்பாக சூரியகுமார் யாதவ் தன்னுடைய பவுலிங்கை கொலை செய்யும் வகையில் அடித்து நொறுக்கியதாக இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி நினைவு கூர்ந்துள்ளார். தங்களது மண்ணில் அப்போட்டியிலேயே தம்மை வெளுத்த அவர் இப்போட்டியில் என்ன செய்யப் போகிறாரோ என்ற வகையில் செமி பைனலுக்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு.

“அப்போட்டியில் அவரை அவுட் செய்வதற்கு முன்பாக என்னுடைய பவுலிங்கை கொலை செய்து விட்டார். அவர்களுக்கு நிறைய ரன்கள் தேவைப்பட்ட போது அவர் இந்தியாவை வெற்றியின் அருகே அழைத்துச் சென்றார். நல்ல வேலையாக கடுமையாக முயற்சித்து நாங்கள் அவரை அவுட் செய்தோம். ஆனால் அன்று அவர் அபாரமாக விளையாடினார். அன்று அவருடைய சில ஷாட்கள் என் வாழ்விலேயே நான் பார்த்த சிறந்தவற்றில் ஒன்றாக அமைந்தது. அந்த வகையில் அவர் ஒரு அற்புதமான வீரர் என்பதுடன் உலகிலேயே சிறந்தவர் என்று நினைக்கிறேன்”

“சொல்லப்போனால் டி20 கிரிக்கெட்டை அவர் மற்றுமொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். மேலும் யாருக்கு எதிராக பந்து வீசக்கூடாது என்று என்னிடம் நீங்கள் கேட்டால் அவர் தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருவார். அவர் சிறப்பாக விளையாடும் போது அவருடைய பலவீனத்தை கண்டறிவது கடினமாக உள்ளது” என்று கூறினார். அப்படி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே துவம்சம் செய்த சூரியகுமார் இப்போட்டிலும் அசத்துவார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Advertisement