
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்ற உள்ளார்கள். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையுடன் விடை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக அவர்களை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக 2027 உலகக் கோப்பையில் 38, 40 வயதில் அவர்களால் நல்ல உடல் தகுதியுடன் நல்ல ஃபார்மில் விளையாட முடியுமா? என்பது கேள்விக்குறியாகும். அதனால் அவர்களை கழற்றி விட்டு இப்போதிலிருந்தே புதிய இளம் அணியை உருவாக்கி 2027 உலகக் கோப்பையை வெல்ல தேர்வுக் குழுவினர் விரும்புகிறார்கள். குறிப்பாக விராட், ரோஹித் ஆகியோரை டெஸ்ட் கிரிக்கெட்டில் கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்தது.
அவருடைய தலைமையில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் இளம் இந்திய அணி சமன் செய்து அசத்தியது. அதே போல 2027 உலகக் கோப்பையில் விளையாட கில் தலைமையில் இளம் அணியை உருவாக்க தேர்வுக்குழுவினர் விரும்புகிறார்கள். அதற்காக வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோஹித்தை கழற்றி விட முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சுப்மன் கில் தலைமையில் இந்தியா 2027 உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் விராட், ரோஹித் ஆகியோரின் அனுபவம் அவசியம் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். எனவே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றிய அவர்களை பிசிசிஐ கழற்றி விடக்கூடாது என்றும் ரெய்னா எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“விராட், ரோஹித் ஆகியோரின் அனுபவம் மிகவும் முக்கியம். ஜூனியர் வீரர்களுடன் அந்த சீனியர் வீரர்கள் இணைந்து விளையாடுவது அவசியம். சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு விராட், ரோஹித் போன்ற அனுபவ வீரர்கள் தேவை. அவர்கள் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக் கோப்பைகளை வென்றுள்ளார்கள். விராட் கடந்த ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்”
இதையும் படிங்க: அவசரப்பட்டு முடிவு எடுக்காதே.. சேவாக்கின் கரியரை காப்பாற்றிய சச்சின் – சேவாக் பகிர்ந்த தகவல்
“தங்களுடைய கேரியரில் கேப்டனாகவும் செயல்பட்டு தலைமைப் பண்பில் அசத்திய அவர்கள் இளம் இந்திய அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” என்று கூறினார். மேலும் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 187 ஓவர்கள் போட்டு அசத்திய முகமது சிராஜ் 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்று ரெய்னா ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.