இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை யு.ஏ.இ-ல் நடைபெற இருக்கும் இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.
அதில் பி.சி.சி.ஐ ஒரு பெரிய இணைப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அணியின் ஆலோசகராக நியமித்தது ரசிகர்களின் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனெனில் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டனாக பார்க்கப்படும் தோனி தற்போதுள்ள இந்திய வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்பதால் வீரர்களின் நிறைகுறைகள் அவர்களது திறன் குறித்த அனைத்தையும் அவர் அறிந்து வைத்துள்ளார்.
மேலும் அவரது அனுபவம் நிச்சயம் இந்த டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல உதவும் என்பதனால் அவரது இந்த புதிய பதவிக்காக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்ற தோனி அணியின் ஆலோசகராக செயல்பட இருப்பது அவரது ரசிகர்களையும் பெரிதளவில் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
All the very best to #TeamIndia on the upcoming T20 World Cup, the selected squad looks very balanced. Good to have @ashwinravi99 back in the team, and a fabulous decision by @bcci to have the man himself @msdhoni bhai as the mentor.
— Suresh Raina🇮🇳 (@ImRaina) September 8, 2021
இந்நிலையில் தோனியின் நெருங்கிய நண்பரும், சிஎஸ்கே அணியின் துணை கேப்டனான சுரேஷ் ரெய்னா தோனியின் இந்த ஆலோசகர் பதவி குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் : “ஆல் தி பெஸ்ட் டீம் இந்தியா”, “எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான அணி மிக சமமான அணியாக இருக்கிறது” அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி.
அதேபோல “பிசிசிஐ தோனியை ஆலோசகராக நியமித்தது மிகச் சிறப்பான ஒரு முடிவு” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தைப் பதிவிட்டுள்ளார். அவரது இந்த கருத்து இணையத்தில் வைரலாக ரசிகர்களும் பி.சி.சி.ஐ-யின் இந்த முடிவு மிகச் சிறப்பான ஒன்று என்று தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.