
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் கடைசிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியைத் தவிர்த்தது. அந்தப் போட்டியில் 237 ரன்களை துரத்திய இந்தியா 38.3 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
அந்த வெற்றிக்கு பேட்டிங்கில் ரோஹித் சர்மா சதமடித்து 121* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார். அவருடன் இணைந்து விளையாடிய விராட் கோலி 74* ரன்கள் விளாசி போட்டியை ஃபினிஷிங் செய்தார். கடந்த 2 போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டான அவர் 3வது போட்டியில் ஃபார்முக்கு திரும்பி தம்மை சந்தேகித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
அதனால் வயதானாலும் தரம் மாறவில்லை என்பதை சிட்னியில் நிரூபித்த விராட், ரோஹித் சர்மா தங்களை 2027 உலகக் கோப்பைக்கு முன் கழற்றி விட நினைக்கும் தேர்வுக்குழுவுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். மேலும் 2027 உலகக் கோப்பைக்கு முன் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று ரோஹித் சர்மா போட்டியின் முடிவில் தெரிவித்தார். 2027 உலகக் கோப்பையை மனதில் வைத்து இனிவரும் போட்டிகளில் புத்துணர்ச்சியுடன் புதிதாக விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா தங்களுடைய தரத்தையும் அனுபவத்தையும் சிட்னியில் மீண்டும் நிரூபித்துள்ளதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர்களுடைய பெயரை இப்போதே எழுதலாம் என்று கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் விளையாடுவதற்காக விராட், ரோஹித் தங்களைத் தாங்களே தயாராக வைத்திருந்தனர். அது 2027 உலகக் கோப்பையில் விளையாட நாங்கள் இருக்க விரும்புகிறோம் என்று அவர்கள் சொல்வதைத் தெளிவாக காட்டுகிறது. இங்கிருந்து உலகக்கோப்பைக்கு முன் என்ன நடந்தாலும், ரன்கள் அடித்தாலும் இல்லையென்றாலும் அவர்கள் இந்திய அணியில் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆனது? அவர் ஏன் பீல்டிங் செய்ய வரவில்லை – பி.சி.சி.ஐ விளக்கம்
“ஏனெனில் தங்களிடம் இருக்கும் திறன் மற்றும் அனுபவத்துக்கு இந்தியாவுக்காக விளையாட விருப்பம் தெரிவித்தால் அவர்கள் கண்டிப்பாக உலகக் கோப்பை அணியில் இருக்க வேண்டும். குறிப்பாக தற்போது அவர்கள் இருக்கும் ஃபார்முக்கு நீங்கள் அவர்களுடைய பெயரை தென்னாபிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எழுதலாம்” என்று கூறினார்