- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டின் முதல் பந்திலேயே நான் சிக்ஸ் அடிக்க இதுவே காரணம் – சூரியகுமார் யாதவ் அளித்த பதில்

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தான் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசியதோடு மட்டுமல்லாமல், அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியிருந்த சூர்யகுமார் யாதவ், அந்த போட்டியின்போது தனக்கு இருந்த மன நிலையைப் பற்றி ஒரு நேரலையில் கூறியிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் அவரின் நேரலை பதியப்பட்டுள்ளது. அதில் பேசியுள்ள அவர், அந்த போட்டியில் விளையாட நான் எவ்வளவு ஆர்வமாக இருந்தேன் என்று நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள்.

அந்த போட்டியில் ரோஹித் சர்மா சீக்கிரமாக அவுட் ஆனது எனக்கு வருத்தமாக இருந்தாலும், எனக்கான வாய்ப்பு கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் தான் நான் அவ்வளவு விரைவாக களத்திற்குள் நுழைந்தேன். ஏனெனில் இந்திய அணிக்காக பேட்டிங் விளையாடப்போகும் தருணத்திற்காக நான் நிறைய வருடங்கள் காத்துக் கொண்டிருந்தேன். அந்த வாய்ப்பு அன்றைக்கு அமைந்தது, நான் ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருக்கும்போது பேட்டிங் விளையாட எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதை எதிர்நோக்கி ஆவலோடு இருந்தேன். அதே சமயம் என்னுடைய மனதில் சிறிது பதட்டமும் இருந்தது என்று அவர் கூறினார்.

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்காக விளையாட சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. துருதிர்ஸ்ட வசமாக அந்த போட்டியில் அவருக்கு பேட்டிங் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதற்கடுத்த நான்காவது போட்டியில் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த போட்டியில் பேட்டிங்கில் களமிறங்கிய அவர், ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து சர்வதேச போட்டியில் தன்னுடைய ரன் கணக்கை துவங்கினார். அந்த சிக்ஸைப் பற்றிய பேசிய அவர்,

ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்றதும், அடுத்து களமிறங்கும் புதிய பேட்ஸ்மேனுக்கு ஷார்ட்பிட்ச் பௌன்சர் பந்தை தான் பௌலர்கள் வீசுவார்கள் என்று நான் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தேன். நான் நினைத்தது போலவே ஆர்ச்சரும் அதே போன்ற பந்தைதான் வீசினார். எனவே அதற்காகவே காத்திருந்த எனக்கு அந்த பந்தை சிக்ஸ் அடிப்பதில் அவ்வளவு சிரமம் ஏற்படவில்லையென்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர்,

நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்றாவது இடத்தில் களமிறங்குகிறேன். அந்த அணிக்காக நான் என்ன செய்கிறோனோ அதையே தான் நான் மற்ற அணிகளுக்காகவும் செய்ய விரும்புகிறேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எதையும் நான் மாற்றி அமைக்க விரும்பவில்லை, கடைசி வரை சிறப்பாக செயல்படமட்டுமே விரும்புகிறேன் என்று அவர் அந்த நேரலையில் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by