இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. உலகின் நம்பர் ஒன் அணியான இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த தொடரில் பல இந்திய இளம் வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. பலம்வாய்ந்த இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த வெற்றி இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த டி20 தொடரை அடுத்து இவ்விரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை புனே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடி இங்கிலாந்து அணியை வைட் வாஷ் செய்ய காத்திருக்கிறது. அதேபோல் டி20 தொடரில் வாய்ப்பு கொடுத்ததைப் போன்று ஒருநாள் தொடரிலும் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய சூர்யகுமார் யாதவ் தனது முதல் போட்டியில் பேட்டிங் செய்யவில்லை என்றாலும் இரண்டாவதாக விளையாடிய போட்டியில் 31 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து கடைசி டி20 போட்டிகளில் விளையாடியவர் 17 பந்துகளில் 32 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அவரின் இந்த சிறப்பான செயல்பாடு பலரது பாராட்டுக்களையும் பெற்றது. அதுமட்டுமின்றி ஒருநாள் தொடருக்கான அணியில் அவரின் பெயரை இடம்பெறச் செய்தது. இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த இந்த டி20 தொடரில்தான் அறிமுகமானது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார் சூர்யகுமார் யாதவ்.
Debut series are always special. This one will be an extra special one.🇮🇳🏆🧿 pic.twitter.com/JzATVX8mJx
— Surya Kumar Yadav (@surya_14kumar) March 22, 2021
அதில் அவர் குறிப்பிட்டதாவது : “அறிமுக தொடர் என்பதே சிறப்பு. அதிலும் இந்த அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது அதைவிட சிறப்பு” என தனது இரட்டிப்பு மகிழ்ச்சியை கோப்பையுடன் இருக்கும் புகைப்படங்களோடு பகிர்ந்து அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.