மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.
இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே திறமைசாலியாக இருந்தால் உங்களை நிரூபிக்க வாய்ப்புகள் தேவை. நீங்கள் தொடர்ந்து திறமையை நிரூபித்துக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். எனக்கு சில போட்டிகளில் அணியில் இடம் கிடைத்தாலும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் பொறுமை இழக்க வேண்டி வரும் என்பது உண்மைதான் ஆனால் அணி தேர்வு நம் கையில் இல்லையே. அடிக்கடி வருவதும் போவதுமாக இருந்தால் நம் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும். நான் எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவன் எனவே எதையும் நினைத்து நான் குழம்பவில்லை, எனது வாய்ப்புக்காக காத்திருந்தேன். உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத வருத்தமாக இருந்தது. எனினும் அடுத்த உலகக் கோப்பையில் எனக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
தினமும் பேட்டிங் பயிற்சி செய்கிறேன் முடிந்தவரை சிறப்பான ஷாட்டுகளை விளையாட வேண்டும் என்று நினைப்பேன். இந்த பயிற்சி சர்வதேச அரங்கில் என சிறப்பாக செயல்பட வைக்கும் என்று நினைக்கிறேன். இந்திய ஏ அணியில் விளையாடியது என்னை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக நினைக்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடும் லெவனில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று ஐயர் கூறினார்.