
இந்திய அணியின் இளம் அதிரடி துவக்க வீரரான ப்ரித்வி ஷா கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகி இதுவரை 79 போட்டியில் விளையாடி 14 அரை சதங்களுடன் 1892 ரன்கள் குவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணிக்காக கேப்டனாக செயல்பட்டு உலகக் கோப்பையை வென்ற அவர் 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.
அப்படி அறிமுகமான அவர் 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடியிருந்தார். இவ்வேளையில் ஃபிட்னஸ் மற்றும் ஒழுக்கமின்மை காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட முடியாமல் தவிக்கும் அவருக்கு ஐபிஎல் தொடரிலும் கதவுகள் மூடப்பட்டது.
கடந்த ஆண்டு டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த அவர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அந்த அணி அவரை வெளியேற்றியது. அதன் பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இதனால் தற்போது கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் பஞ்சாப் அணியால் தக்கவைக்கப்பட்ட ஷஷாங்க் சிங் ப்ரித்வி ஷாவின் இந்த நிலை குறித்தும், அவர் கம்பேக் கொடுக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ப்ரித்வி ஷா மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டு இருக்கும் வீரர். அவர் தன்னுடைய திறனை சரியாக வெளிக்கொணர்ந்தால் எதையும் சாதிக்க முடியும்.
நான் 13 வயதிலிருந்து அவரை பார்த்து வருகிறேன். மும்பை அணிக்காக கிளப் போட்டிகளில் விளையாடும் போது அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. ப்ரித்வி ஷா ஒரு சில மாற்றங்களை செய்தால் மீண்டும் அவரால் மிகச்சிறந்த கம்பேக் கொடுக்க முடியும். அந்த வகையில் இரவு 11 மணிக்கு தூங்கப்போவதற்கு பதிலாக 10 மணிக்கே தூங்க செல்லலாம்.
இதையும் படிங்க : உங்களால் மட்டும் இது எப்படி முடிகிறது? தோனியிடம் கேள்விகேட்ட ஹர்பஜன் சிங் – பதிலளித்த தோனி
மேலும் உணவு கட்டுப்பாடுகளையும் அவர் மேற்கொண்டால் மீண்டும் முழு உடற்தகுதியுடன் கிரிக்கெட் களத்திற்கு பலமாக திரும்ப முடியும் என ஷஷாங்க் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.