வெறிகொண்ட வேங்கையாய் வெளுக்கும் இளம் வீரர், ரஞ்சி பைனலில் கண்ணீர் பொங்க சதம் – பிசிசிஐயை திட்டும் ரசிகர்கள், என்ன நடந்தது

Safaraz Khan
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த தொடரின் லீக் சுற்றில் தமிழகம் போன்ற அணிகள் சுமாராக செயல்பட்டு வெளியேறிய நிலையில் பெங்களூரு, உத்தரப்பிரதேசம், மும்பை போன்ற 8 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து ஜூன் 8 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்ற இந்த தொடரின் நாக் அவுட் சுற்றில் காலிறுதி மற்றும் அரையிறுதியில் அசத்திய மும்பை மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

அதையடுத்து 41 சாம்பியன் பட்டங்களை வென்று வெற்றிகரமான ரஞ்சி அணியாக முரட்டுத்தனமான சாதனை படைத்துள்ள மும்பையை மத்தியபிரதேசம் எதிர்கொள்ளும் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 22இல் பெங்களூருவில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் பிரிதிவி ஷா மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இளம் ஓப்பனிங் ஜோடி 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தது. அதில் பிரிதிவி ஷா 47 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த அர்மான் ஜாபர் 26, சுவேட் பார்க்கர் 18 என சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள்.

- Advertisement -

மிரட்டிய சர்பராஸ்:
இருப்பினும் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து 78 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் 185/4 என தடுமாறிக் கொண்டிருந்த மும்பையை மிடில் ஆர்டரில் களமிறங்கிய அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் இளம் வீரர் சர்பராஸ் கான் நங்கூரமாக நிலைத்து நின்று நிதானமாக ரன்களை சேர்த்தார். ஆனால் எதிர்ப்புறம் வந்த ஹர்டிக் டாமோர் 24, சாம்ஸ் முலானி 12, டானுஷ் கோடின் 15 என முக்கிய பேட்ஸ்மேன்கள் மத்திய பிரதேசத்தின் தரமான பந்துவீச்சில் அவருக்கு கை கொடுக்காமல் சீரான இடைவெளிகளில் அவுட்டாகி சென்று கொண்டிருந்தனர்.

ஆனாலும் மறுபுறம் ஏற்கனவே முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் சர்பராஸ் கான் அற்புதமாக பேட்டிங் செய்தது 13 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 134 ரன்களை விளாசி கடைசிவரை மும்பையை தாங்கிப்பிடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதனால் மும்பை தனது முதல் இன்னிங்சில் 374 என்ற நல்ல ஸ்கோரை எடுத்து ஆல் அவுட்டானது. மத்திய பிரதேசத்தின் சார்பில் அதிகபட்சமாக கெளரவ் யாதவ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து மத்திய பிரதேசம் தனது 2-வது இன்னிங்சை துவங்கி பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

உணர்வுபூர்வமான சதம்:
இப்போட்டியில் சதமடித்த சர்பராஸ் கான் இந்தியாவுக்காக விளையாட இன்னும் எத்தனை சதங்கள் அடிக்க வேண்டும் என்று இந்திய தேர்வு குழுவினரை பேட்டால் கேள்வி கேட்டது அவரின் கண்ணீர் விடாத உணர்ச்சி பூர்வமான முகம் தெளிவாக காட்டியது. ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் குறிப்பாக ரஞ்சி கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற உயர்ந்த லட்சத்தில் ரன் மெஷினாக ரன் மழை பொழிந்து வரும் இவர் 2000க்கும் மேற்பட்ட விளாசி எதிரணிகளை வெளுத்து வாங்கி வருகிறார்.

அதுவும் இந்த வருட ரஞ்சி தொடரில் 275, 63, 48, 165 என பெரிய ரன்களை குவித்த அவர் நாக்-அவுட் சுற்றில் 153, 40, 59*, 134 என 2 அரை சதங்கள் 3 சதங்கள் ஒரு இரட்டை சதம் உட்பட 937 ரன்களை விளாசி அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். மேலும் கடந்த வருடமும் 928 ரன்களை குவித்த அவர் ரஞ்சி கோப்பை வரலாற்றில் 2 சீசன்களில் அதிக ரன்கள் குவித்த 3-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை வாசிம் ஜாபர், அஜய் சர்மா ஆகியோருக்கு பின் படைத்துள்ளார்.

திட்டும் ரசிகர்கள்:
ஆனாலும் இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து அவரை புறக்கணித்து வருவதால் இந்தியாவுக்கு விளையாட வேண்டுமென்ற ஆசை வெறியாக மாறி தற்போது வெறி கொண்ட வேங்கையாகவே அவர் எதிரணிகளை புரட்டி எடுத்து வருகிறார் என்றே கூறலாம்.

குறிப்பாக இப்போட்டியில் சதமடித்த பின் கடும் ஆக்ரோஷத்துடன் தொடையை தட்டி கொண்டாடிய அவர் ஒரு நொடி கண்ணீரை விட்டது தெளிவாக தெரிந்தது. அதை பார்த்த ரசிகர்கள் இந்தியாவுக்காக விளையாட இன்னும் என்ன தான் செய்ய வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினரை சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Advertisement