
கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் கடந்த 2015 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இருப்பினும் இதுவரை அவருக்கு நிலையாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது பேசுபொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக அவருக்கு இதுவரை 10 போட்டிகளில் கூட தொடர்ச்சியாக விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது நிதர்சனமாகும்.
அதே சமயம் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் சஞ்சு சாம்சன் சிறப்பாக பயன்படுத்துவதில்லை என்பதும் உண்மையாகும். எடுத்துக்காட்டாக 2024 ஐபிஎல் தொடரில் ஓரளவு அசத்திய அவர் சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் தேர்வானார். ஆனால் அந்த தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சொதப்பியதால் அவரை கழற்றி விட்ட ரோஹித் சர்மா விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுத்தார்.
கனவு நிஜமாகிடுச்சு:
அந்த நிலையில் சமீபத்திய இலங்கை டி20 தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார். அதில் முதல் போட்டியில் வாய்ப்பு பெறாத அவர் 2வது போட்டியில் டக் அவுட்டானார். ஆனால் 3வது போட்டியிலும் டக் அவுட்டான அவர் சில கேட்ச்களை தவற விட்டு இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் சஞ்சு சாம்சன் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துவதில்லை அவரை ஆதரித்த ரசிகர்களே அதிருப்தியில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில் இலங்கை டி20 தொடரில் தாம் சிறப்பாக செயல்படவில்லை என்று சஞ்சு சாம்சன் ஒப்பு கொண்டுள்ளார். அதே சமயம் 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணியுடன் சேர்ந்து வென்றது தம்முடைய மிகப்பெரிய கனவு நிஜமான தருணம் என்று அவர் பெருமை தெரிவித்துள்ளார். இது பற்றி சஞ்சு சாம்சன் பேசியது பின்வருமாறு. “கடைசி 3 – 4 மாதங்கள் எனது கேரியரில் சிறந்த நேரம் என்று சொல்வேன்”
“உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கமாக இருந்தது கனவு நிஜமான தருணம். அதற்காக நான் கடந்த 3 – 4 வருடங்களாக விரும்பினேன். ஆனால் அணியில் இணைந்த பின்பு தான் டி20 உலகக் கோப்பையை வெல்வது எளிதான விஷயமல்ல என்பதை உணர்ந்தேன். ஆனால் கடந்த இலங்கைத் தொடரில் நான் எதிர்பார்த்த அளவுக்கு நன்றாக செயல்படவில்லை”
இதையும் படிங்க: கும்ப்ளே கிடையாது.. முரளிதரன், வார்னேவுக்கு பின் அந்த பாகிஸ்தான் வீரர் 3வது சிறந்த ஸ்பின்னர்.. டேவிட் லாய்ட்
“அதே சமயம் மலையாள மக்கள் மற்றும் இந்திய மக்களிடம் இருந்தும் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் எனக்கு கிடைத்த ஆதரவு அளப்பரியது. அதனால் நீங்கள் எங்கே சென்றாலும் உங்களுக்கு ஆதரவு கிடைப்பதாக மற்ற இந்திய வீரர்கள் என்னிடம் சொல்வார்கள். ஆனால் அந்த ஆதரவுக்கு மத்தியில் நான் டக் அவுட்டானதாலேயே ஏமாற்றமடைந்தேன்” என்று கூறினார்.