நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்ததோடு இந்த தொடரையும் மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான தோல்விக்கு இந்திய அணியின் மோசமான பேட்டிங் தான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 235 ரன்களை மட்டுமே குவித்த வேளையில் இந்திய அணி 263 ரன்கள் குவித்து அவர்களை விட 28 ரன்கள் முன்னிலை பெற்றது.
சர்பராஸ் கான் விடயத்தில் நடந்த தவறு :
அதோடு இரண்டாவது இன்னிங்ஸிலும் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்த இந்திய அணியானது நியூசிலாந்து அணியை 174 ரன்களில் சுருட்டியது. இதன் காரணமாக இந்திய அணிக்கு 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்று எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணியானது 121 ரன்களில் சுருண்டது.
இந்த இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பண்ட் மட்டுமே அரைசதம் அடித்த வேளையில் ரோகித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பத்து ரன்களை கடந்தனர். அவர்களை தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் 150 ரன்கள் அடித்திருந்த வேளையில் இந்த மூன்றாவது போட்டியில் அவர் தடுமாற்றத்தை சந்தித்தார்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ரன்கள் எதுவும் எடுக்காமலும், இரண்டாவது இன்னிங்சில் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்நிலையில் சர்ஃபாஸ் கான் இப்படி சரிவை சந்தித்ததற்கு காரணமே அவரின் பேட்டிங் ஆர்டரை மாற்றி மாற்றி விளையாட வைப்பது தான் என சஞ்சய் மஞ்சுரோக்கர் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தொடரின் முதல் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் 150 ரன்களை அடித்திருந்தார்.
சுழற்பந்து வீச்சாளர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களையும் அருமையாக கையாளும் அவரை இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் எட்டாவது வீரராக களம் இறக்கினார்கள். ரோகித் சர்மா மற்றும் கம்பீர ஆகியோர் எடுத்த இந்த முடிவு எனக்கு சரியாக படவில்லை. ஏனெனில் அவரை முன்கூட்டியே களமிறக்கி இருந்தால் நிச்சயம் அவரால் பெரிய ஒரு இன்னிங்ஸை விளையாடியிருக்க முடியும். அதே போன்று இரண்டாவது இன்னிங்சிலும் அவரை முன்கூட்டியே களமிறக்கி இருக்கலாம். இப்படி சர்ஃபராஸ் கானிற்கு டாப் ஆர்டரில் நிலையான இடம் இல்லாததாலே அவரால் சரியாக விளையாட முடியாமல் போகிறது.
இதையும் படிங்க : இதை நாங்க கொஞ்சம் கூட எதிர்பாக்கல.. இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த பிறகு பேசிய – டாம் லேதம்
சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் தனது பார்மை ஏற்கனவே நிரூபித்து விட்டார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் நன்றாக விளையாட வேண்டும் என்று பொறுப்புடன் விளையாடுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் டெஸ்ட் கிரிக்கெட் போன்று மிகப்பெறுமையாக விளையாடுகிறார். அவரிடம் நல்ல முதிர்ச்சி இருக்கிறது. உண்மையிலேயே தற்போது அவர் விளையாடும் விதம் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



