இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் இந்திய அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முழு நேர வர்ணனையாளராக மாறியுள்ள மஞ்சரேக்கர் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார். மேலும் ஐபிஎல் தொடரின்போது மும்பை அணிக்கு ஆதரவாக அவர் செயல்பட்டது தெரிய வந்ததால் வர்ணனையாளர் பதவியில் இருந்தும் சில மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். ஆனாலும் இதுவரை அவர் திருந்தியதாக தெரியவில்லை.
ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வினை ஆல்டைம் பெஸ்ட் கிரிக்கெட் வீரர் கிடையாது என்ற ஒரு கருத்தை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். இப்படி அடிக்கடி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகும் வகையில் இவர் விமர்சனத்தை வைத்து வருவதால் இவரை வர்ணனையாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அவரது இந்த சர்ச்சையான கருத்துக்கள் ஓய்ந்தபாடில்லை. தற்போது மீண்டும் ஒரு தடவை ஜடேஜாவை பற்றி ஒரு சர்ச்சையான கருத்தை கூறி சிக்கலில் சிக்கி உள்ளார். சூரியநாராயணன் என்பவருடன் ட்விட்டரில் சாட்டிங் செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்றும், நான் ஏற்கனவே அவரை பற்றி பேசியபோது கூட நான் சொன்ன அர்த்தம் அவருக்குப் புரியவில்லை. அதே போன்று அவர் எனக்கு விளக்கம் அளித்தபோது கூட யாராவது ஒருவர் அவருக்கு ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.
ஜடேஜாவை பற்றி இப்படி அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்த சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த மெசேஜ்களை சூரிய நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும் அதில் பி.சி.சி.ஐ மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலியையும் டேக் செய்துள்ளார். இந்த பதிவை பகிர்ந்து அவர் : ஒரு தனிமனிதனின் உரையாடலை நான் பொதுவெளிக்கு கொண்டு வரக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனாலும் இந்த மனிதனின் மறுபக்கம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதால் நான் இதை பகிர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
I didn’t want to share this personal chat in public, even though it’s full to shit. But couldn’t help, coz ppl need to know this side of this man. @imjadeja would be proud of what he did to prove you wrong. @BCCI is this the kind of man you would want in your com panel in future? pic.twitter.com/AUjX301Foz
— soorya narayanan (@soorya_214) June 7, 2021
இது போன்ற நபர்களை வர்ணனையாளர் குழுவில் சேர்க்க கூடாது எனவும் அவர் காட்டமான கருத்தினை வெளியிட்டுள்ளார். சஞ்சய் மஞ்சரேக்கர் செய்த இந்த சர்ச்சையான ட்வீட்டுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வர அவரை வர்ணனையாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கொதித்து எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.