சி.எஸ்.கே அணியில் நாங்க பிரன்ட்ஸ். ஆனா இப்போ டெஸ்ட்ல நாங்க எதிரி – சாம் கரன் ஓபன்டாக்

Curran
- Advertisement -

இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 23 வயது இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 21 டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் 30 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இங்கிலாந்து அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக தற்போது மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இடம்பெற்று விளையாடி வருகிறார். பந்துவீச்சில் மட்டுமின்றி தனது பேட்டிங்கிலும் பலம் சேர்க்கும் சாம் கரன் அறிமுகமானதிலிருந்து இங்கிலாந்து அணிக்காக சிறப்பான ஆல் ரவுண்ட் பர்பார்மென்சை வெளிப்படுத்தி வருகிறார்.

curran 1

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ள சாம் கரன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் தான் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு எதிராக விளையாடும் அனுபவம் குறித்து பேசியுள்ள அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரானது பல்வேறு வீரர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பையும், அவர்களிடம் அதிக நேரம் பேசும் தருணங்களையும் தருகிறது.

மேலும் இவ்வாறு உலகில் உள்ள அனைத்து வீரர்களுடனும் கலந்துரையாடுவதால் என்னுடைய ஆட்டம் இன்னும் மேம்படுகிறது. சிஎஸ்கே அணிக்காக நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருவது ஒரு அற்புதமான தருணம். சிஎஸ்கே அணியில் இருந்து பல விடயங்களை நான் கற்றுக் கொண்டுள்ளேன். ஏற்கனவே சிஎஸ்கே அணியுடன் விளையாடும் பொழுது ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருடன் நன்கு பழகி உள்ளேன்.

jadeja

ஆனால் தற்போது டெஸ்ட் போட்டியில் நாங்கள் எதிரிகளாக விளையாடி வருகிறோம். ஐபிஎல் தொடரின்போது அவர்கள் இருவருமே எனக்கு மிகச்சிறந்த நண்பர்கள். ஆனால் இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் எங்களை எதிர்த்து விளையாடி கொள்வதால் எதிரிகளாக கருதி விளையாடி வருகிறோம். இருப்பினும் போட்டியை தவிர்த்து அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இந்த டெஸ்ட் தொடர் முடிந்து ஐபிஎல் போட்டிகளில் அவர்களுடன் இணைந்து விளையாட காத்திருக்கிறேன் என சாம் கரன் கூறியுள்ளார்.

sam curran

மேலும் தோனி குறித்து பேசுகையில் : தோனி எப்பொழுதுமே பந்துவீச்சாளர்களுக்கு ஒரு நல்ல கேப்டனாக இருந்துள்ளார். பந்துவீச்சாளர்களின் திறனை உணர்ந்து அவர்களை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டுமோ அது போன்று சிறப்பாக பயன்படுத்துவதில் தோனி ஒரு சிறந்த கேப்டன். அவரின் தலைமையின் கீழ் சிஎஸ்கே அணியில் விளையாடுவது எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை தருகிறது. தோனி போன்ற ஒரு வீரர் அணியில் இருக்கும் போது நம்மால் பல விடயங்களை சாதிக்க முடியும் என்றும் சாம் கரன் கூறியுள்ளார்.

Advertisement