இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை வென்ற இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி விளையாடுகிறது. அந்த நிலைமையில் ஜனவரி 10 தேதியன்று அசாம் மாநிலம் கௌகாத்தி நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதில் கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்திருந்த இசான் கிசானுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சுப்மன் கில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கினார்.
பேட்டிங்க்கு சாதகமாக இருந்த மைதானத்தில் பவர் பிளே ஓவரில் இலங்கை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடி ஆரம்பம் முதலே பவுண்டரிகளை பறக்க விட்டு விரைவாக ரன்களை சேர்த்தது. குறிப்பாக சுப்மன் கில் ஆரம்பத்திலேயே அதிரடியை துவக்கிய நிலையில் மறுபுறம் சுமாரான பார்மில் தவிக்கும் ரோஹித் சர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் நன்கு செட்டிலான பின் இலங்கை பவுலர்களை வெளுக்க துவங்கிய ரோகித் சர்மா விரைவாக ரன்களை சேர்த்து முதல் ஆளாக அரை சதமடித்து ஓரளவு ஃபார்முக்கு திரும்பினார்.
அசத்திய ரோஹித்:
நேரம் செல்ல செல்ல மேலும் செட்டிலாகி அதிரடியாக செயல்பட்ட இந்த ஜோடியில் இருவருமே அரைசதம் கடந்து முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் ஓப்பனிங் அமைத்து இந்தியாவுக்கு அற்புதமான தொடக்கம் கொடுத்தனர். 19.4 ஓவர்கள் வரை மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடியில் சுப்மன் கில் 11 பவுண்டரிகளுடன் 70 (60) ரன்களை எடுத்திருந்த நிலையில் கேப்டன் சனாக்காவிடம் ஆட்டமிழந்தார்.
அவருக்கு அடுத்தபடியாக வந்த விராட் கோலியுடன் கைகோர்த்த கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து அதிரடியாக விளையாடியதால் ஜனவரி 2020க்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடிக்க முடியாமல் தவித்து வரும் கதைக்கும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் சுயநலத்தை பார்க்காமல் அணிக்காக விளையாடிய அவர் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 83 (67) ரன்களை 123.88 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து 24வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
முன்னதாக 2022இல் ரொம்பவே தடுமாறிய ரோகித் சர்மா வங்கதேசத்துக்கு எதிராக கடைசியாக கையில் வலியுடன் 51* (28) ரன்களை விளாசி வெற்றிக்கு போராடினார். அந்த நிலையில் 2023 புத்தாண்டில் முதல் முறையாக களமிறங்கிய இப்போட்டியில் விளையாடிய விதத்தை பார்க்கும் ரசிகர்கள் மீண்டும் பழைய ஃபார்முக்கு பழைய பன்னீர்செல்வமாக அவர் திரும்புவதை உணர்வதாக சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுகிறார்கள்.
Captain @ImRo45 brings up his 47th ODI FIFTY!
A look at one of his MAXIMUMS in the innings so far.
Live – https://t.co/MB6gfx9iRy #INDvSL @mastercardindia pic.twitter.com/KdjsFEZdxr
— BCCI (@BCCI) January 10, 2023
குறிப்பாக 2023 உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே 83 என்ற நல்ல ரன்களைக் குவித்து சிறப்பான துவக்கத்தை பெற்றுள்ள அவர் நிச்சயம் அடுத்த வரும் போட்டிகளில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பி உலக கோப்பையை வென்று கொடுப்பார் என்றும் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். முன்னதாக இப்போட்டியில் 83 ரன்கள் குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 9500 ரன்களை கடந்து 10000 ரன்களை நெருங்கியுள்ளார்.
அதை விட ஓப்பனிங் வீரராக 7500 ரன்களை கடந்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 7500 ரன்களை கடந்த தொடக்க வீரர் என்ற தென்னாபிரிக்காவின் ஹாஸிம் அம்லா சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 149 இன்னிங்ஸ்*
2. ஹாசிம் அம்லா : 158 இன்னிங்ஸ்
3. சச்சின் டெண்டுல்கர் : 170 இன்னிங்ஸ்
4. சௌரவ் கங்குலி : 182 இன்னிங்ஸ்
5. கிறிஸ் கெயில் : 193 இன்னிங்ஸ்
இதையும் படிங்க: வீடியோ : அழாதே தம்பி நான் தான் வந்துட்டேன்ல, குட்டி இந்திய ரசிகர்கரின் கண்ணீரை துடைத்த ரோஹித் சர்மா
அவரது அதிரடியால் நல்ல தொடக்கத்தை பெற்ற இந்தியா சற்றுமுன் வரை 30 ஓவர்களில் 200 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. களத்தில் விராட் கோலி அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.