நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ரியான் பராக். அணிக்கு தேவையான நேரத்தில் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடிய ரியான் 43 ரன்களை அடித்தார். 17 வயது இளம் வீரரான இவர் அசாம் மாநில அணிக்காகவும், ப்ரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டிகளிலும் விளையாடியவர். இவர் தோனியின் மிகப்பெரிய ரசிகர் ஆவார். தான் வளரும்போதே தோனி போன்று பெரிய கிரிக்கெட்டராக வேண்டும் என்று நினைத்து வளர்ந்தவர்.
தனது 15 ஆவது வயதிலே 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம்பிடித்து இரண்டு ஆண்டுகால ஆண்டுகள் சிறப்பாக விளையாடி இந்த வருட ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். ஒருமுறை தோனியை சந்தித்த போது எடுத்தப்படம் அந்த சிறிய வயது புகைப்படம். தற்போது 2 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ள ரியான் சென்னை அணிக்கு எதிராக அறிமுகமானபோது எடுத்தப்படம் தற்போதைய படம் ஆகும். தோனியின் தீவிர ரசிகரான இவர் தற்போது தோனிக்கு எதிராக ஆடும் அளவிற்கு தனது திறனை வளர்த்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல் தொடரின் 36 ஆவது போட்டி நேற்று மதியம் 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. டிகாக் 47 பந்துகளை 65 ரன்களை அடித்தார், சூரியகுமார் யாதவ் 34 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் என்ற இலக்கினை நிர்ணயித்தது மும்பை அணி.
தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 59 ரன்களை அடித்தார், ரியான் 43 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வானார்.