இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் நாளாக தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 49 ரன்கள் குவித்தார்.
அவரைத்தவிர ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி 118 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களிலும், அக்சர் படேல் 11 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியை விட 89 ரன்கள் முன்னிலையில் உள்ளதால் வெற்றிக்கான வாய்ப்பு சற்று அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின்போது அதிரடியாக விளையாடி சதம் அடித்த பண்ட் இங்கிலாந்து அணியை தனியாளாக அதல பாதாளத்தில் தள்ளினார் என்றே கூறலாம். ஏனெனில் ஒரு கட்டத்தில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இருந்த இந்திய அணி 205 ரன்கள் அடிக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் அணியின் ஸ்கோரை மளமளவென்று உயர்த்தினார்.
மேலும் இந்தப் போட்டியின் போது தேநீர் இடைவேளைக்கு பின்னர் இங்கிலாந்து அணி புது பந்தை கையில் எடுத்தது. வழக்கமாக புது பந்தில் விக்கெட் அதிகம் விழும் அதுவே நிதர்சனம். இந்நிலையில் இன்று இந்திய அணியின் வீரர்களான பண்ட் மற்றும் சுந்தர் ஆகியோர் புது பந்தில் மளமளவென ரன்களை குவித்தனர். அதிலும் பண்ட் மிகச்சிறப்பாக ஆண்டர்சனை எதிர்கொண்டு பல பவுண்டரிகளை அடித்தார்.
I don’t think anyone has had the skill audacity to do that to Jimmy Anderson (in a Test) before #INDvENG #astonishing pic.twitter.com/T3snjDstW5
— simon hughes (@theanalyst) March 5, 2021
அதிலும் ஒரு கட்டத்தில் குறிப்பாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள அனுபவ வீரரான ஆண்டர்சனின் அதிகமான பந்தில் சற்றும் பயமின்றி கீப்பர் மற்றும் ஸ்லிப் ஆகியோருக்கு மேல் ரிவர்ஸ் ஸ்கூப் ஒன்றை தைரியமாக அடித்தார். அந்த ஷாட் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் அந்த ஸ்கூப் ஷாட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய போட்டியில் துணிச்சலோடு விளையாடிய பண்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.