IND vs RSA : அடுத்தடுத்த தோல்வி ! மோசமான சாதனை படைத்த ரிஷப் பண்ட் – கேப்டன்ஷிப்க்கு ஒத்துவர மாட்டாரா

RIshabh Pant Fans
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜூன் 12-ஆம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற 2-வது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் 1 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 2 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக 34 (21) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 5 (7) ஹர்டிக் பாண்டியா 9 (12) என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அந்த நிலைமையில் மறுபுறம் 40 (35) ரன்கள் எடுத்து போராடிய ஷ்ரேயஸ் ஐயர் 40 (35) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அதனால் 98/5 என தடுமாறிய இந்தியாவிற்கு அக்சர் படேல் 10 (11) ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தாலும் கடைசி நேரத்தில் தமிழகத்தின் நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30* (21) ரன்களும் ஹர்ஷல் படேல் 12* (9) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் இந்தியா 148/6 என்ற கௌரவமான ஸ்கோரை எடுத்தது.

- Advertisement -

மிரட்டிய புவி:
அதை தொடர்ந்து 149 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு ஹென்றிக்ஸ் 4 (3) பிரிட்டோரியஸ் 4 (5) வேன் டெர் டுஷன் 1 (7) என பவர்பிளே ஓவர்களில் அற்புதமாக பந்துவீசிய சீனியர் பவுலர் புவனேஸ்வர் குமார் டாப் ஆர்டரை காலி செய்து மிரட்டலான கொடுத்ததால் இந்தியா வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் 29/3 என திணறிய தென் ஆப்பிரிக்காவுக்கு களமிறங்கிய ஹென்றிச் க்ளாஸென் மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் தெம்பா பவுமாவுடன் இணைந்து நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.

4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் கேப்டன் பவுமா 35 (30) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த க்ளாஸென் இந்தியாவை சரமாரியாக அடித்து 7 பவுண்டரி 5 சிக்சருடன் 81 (46) ரன்கள் குவித்து வெற்றியை உறுதிசெய்து அவுட்டானார். இறுதியில் டேவிட் மில்லர் 20* (15) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுக்க 18.2 ஓவரிலேயே 149/6 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே டெல்லியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் வென்றிருந்த அந்த அணி இந்த வெற்றியால் மீண்டும் இந்தியாவை சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து 2 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

சுமார் பண்ட்:
மறுபுறம் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்த தொடரில் முதல் போட்டியில் பேட்டிங்கில் அசத்தினாலும் பந்துவீச்சில் சொதப்பிய இந்திய இம்முறை பேட்டிங் பவுலிங்க் என இரண்டிலுமே சுமாராக செயல்பட்டது. இப்படி முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அடுத்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்த தொடரை கைப்பற்ற முடியும் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் நிலையில் கேஎல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டாலும் காயத்தால் அவர் விலகினார். அதனால் தற்காலிக கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரிஷப் பண்ட் இந்த 2 போட்டிகளிலும் பேட்டிங்கிலும் கேப்டனாகவும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

கேப்டனாக முதல் போட்டியில் சஹாலுக்கு முழுமையான 4 ஓவர்களை வழங்காத அவர் நேற்றைய போட்டியிலும் அக்சர் படேல் முதல் ஓவரிலேயே 19 ரன்கள் கொடுத்தார் என்பதற்காக அவர் மீது நம்பிக்கை இழந்து எஞ்சிய 3 ஓவர்கள் கொடுக்கவில்லை. அதேபோல் 3 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து சிறப்பாக பந்து வீசிய ஆவேஷ் கானுக்கு 4-வது ஓவரை ஏன் வழங்கவில்லை என்று தெரியவில்லை. அதேபோல் பேட்டிங்கிலும் இஷான் கிசான் நல்ல தொடக்கம் கொடுத்து அவுட்டானபோது களமிறங்கிய அவர் வழக்கம்போல குருட்டுத்தனமான ஷாட்டை அடித்து வெறும் 5 (7) ரன்கள் மட்டுமே எடுத்து பொறுப்பின்றி அவுட்டானார்.

- Advertisement -

மோசமான சாதனை:
1. மேலும் முதல் முறையாக இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் சந்தித்த முதல் 2 போட்டிகளில் தோல்வியை பதிவு செய்துள்ளார்.

2. இதன் வாயிலாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.

3. இதற்கு முன் எம்எஸ் தோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா என யாருமே தொடர்ச்சியாக முதல் 2 போட்டிகளில் தோற்றது கிடையாது. மேலும் ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணிக்காக இதேபோல் சுமாராக கேப்டன்ஷிப் செய்த அவர் அணியை வழிநடத்த ஒத்து வர மாட்டார் போல் தெரிகிறது என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

Advertisement