ராக்கெட் வேகத்தில் செயல்பட்ட ரவீந்தர ஜடேஜா – இர்பான் பதானை முந்தி ஆசிய கோப்பை வரலாற்றில் புதிய சரித்திர சாதனை

Ravindra Jadeja
- Advertisement -

ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி நடையை துவங்கியது. அந்த நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று களமிறங்கிய ஹாங்காங் அணிக்கு எதிரான 2வது போட்டியிலும் 40 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 192/2 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21 (13) ரன்களும் கேஎல் ராகுல் 36 (39) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஹாங்காங் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு கடைசி வரை அவுட்டாகாமல் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான பினிசிங் கொடுத்தனர். அதில் அரை சதமடித்த விராட் கோலி 1 பவுண்டரி 3 சிக்சருடன் 59 (44) ரன்கள் எடுக்க மறுபுறம் சரவெடியாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 68* (26) ரன்களை 261.54 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

சூப்பர் 4இல் இந்தியா:
அதை துரத்திய ஹாங்காங் ஆரம்பம் முதலே இந்தியாவின் பந்துவீச்சில் பெரிய ரன்களை தொடர்ச்சியாக எடுக்க தடுமாறி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 152/5 ரன்கள் மட்டுமே எடுத்து முடிந்த அளவுக்கு போராடி தோல்வியடைந்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் முர்த்தசா 9 ரன்களிலும் கேப்டன் நிஜாகத் கான் 10 ரன்களிலும் அவுட்டானதால் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்ய மிடில் ஆர்டரில் போராடிய பாபர் ஹயட் 41 (35) ரன்களும் கின்சிட் ஷா 30 (28) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ஜீசன் அலி 26* (17) ரன்களும் மெக்கன்சி 16* (8) ரன்களும் எடுத்து வெற்றிக்கு போராடி ஆல் அவுட்டாக விடாமல் தங்களது அணியை தலைநிமிர வைத்தனர். இந்த வெற்றிக்கு 68 ரன்கள் எடுத்த முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த வெற்றியால் 2 லீக் போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

ராக்கெட் வேகம்:
முன்னதாக இந்த வெற்றியில் பெரும்பாலான வீரர்கள் முக்கிய பங்காற்றிய நிலையில் பேட்டிங்கில் அசத்தும் வாய்ப்பு பெறாத ரவீந்திர ஜடேஜா பீல்டிங்கில் ஹாங்காங் கேப்டன் நிஜாகத் கான் ரன் எடுக்க அவசரப்பட்டு க்ரீஸ் விட்டு வெளியேறிய போது ராக்கெட் வேகத்தில் குறிபார்த்து ரன் அவுட் செய்து தன்னை மீண்டும் உலகின் நம்பர் ஒன் ஃபீல்டர் என்று நிரூபித்தார். அதை பார்த்த முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் ரவீந்திர ஜடேஜா இருக்கும்போது கிரீஸ் விட்டு நீங்கள் வெளியே வரலாமா என்ற வகையில் மனதார பாராட்டியுள்ளார்.

அதேபோல் பந்துவீச்சில் முழுமையான 4 ஓவர்களை வீசிய அவர் வெறும் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்து இதர பவுலர்களை காட்டிலும் 3.75 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்து வீசி ஆல்-ரவுண்டராக அசத்தினார். ஐபிஎல் 2022 தொடரில் 3 துறைகளிலும் சுமாராக செயல்பட்டு காயத்தால் வெளியேறிய அவர் அதிலிருந்து குணமடைந்து இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய சமீபத்திய தொடர்களில் இதேபோல் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 89/4 என தடுமாறியபோது அழுத்தத்தை சமாளித்து பாண்டியாவுடன் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 35 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் தன்னை டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யக்கூடாது என்று விமர்சித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்ற முன்னாள் வீரர்களின் முகத்தில் கரியைப் பூசும் அளவுக்கு அட்டகாசமாக செயல்பட்டு வருகிறார். பேட்டிங், பீல்டிங் சரி ஆனால் பந்து வீச்சில் தேவைப்படும்போது விக்கெட் எடுப்பதில்லை என்பதே ஜடேஜா மீது வைக்கப்படும் விமர்சனமாக இருக்கிறது.

சரித்திர சாதனை:
அந்த நிலைமையில் நேற்றைய போட்டியில் 1 விக்கெட் எடுத்த அவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற இர்பான் பதான் சாதனையை முறியடித்து புதிய சரித்திர சாதனை படைத்துள்ளார். கடந்த 2010 முதல் ஆசிய கோப்பையில் விளையாடி வரும் ஜடேஜா 2018 வரை 4, 1, 7, 3, 7 என ஏற்கனவே 22 விக்கெட்டுக்களை எடுத்திருந்த நிலையில் நேற்றைய போட்டியில் எடுத்த விக்கெட்டையும் சேர்த்து 23* விக்கெட்டுகளை எடுத்து இந்த சாதனை படைத்துள்ளார்.

அவரை சென்னை நிர்வாகம் வாழ்த்தியுள்ள நிலையில் இதற்கு முன் முன்னாள் வீர்ர இர்பான் பதான் 22 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் ஆல்-ரவுண்டர் என்ற அடிப்படையில் விக்கெட்டுகளை எடுக்கும் திறமை பெற்றுள்ள ஜடேஜா டி20 உலக கோப்பையில் விளையாடும் தகுதியுடையவர் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement