சச்சினுக்கு அடுத்த இந்தியாவின் மேட்ச் வின்னராக அஷ்வின் அபார சாதனை – விமர்சித்தவர்களுக்கு தமிழக ரசிகர்கள் பதிலடி

Ashwin Sachin Tendulkar
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 22ஆம் தேதியன்று டாக்காவில் துவங்கிய 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 227 ரன்களுக்கு அவுட்டானது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 94/4 என தடுமாறினாலும் ரிசப் பண்ட் 93 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர்.

அதனால் 314 ரன்கள் குவித்த இந்தியாவை ஆல் அவுட்டாக்கிய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் மற்றும் டைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய வங்கதேசம் மீண்டும் இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் 231 ரன்களுக்கு அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

விமர்சகர்களுக்கு சமர்ப்பணம்:
இறுதியில் 145 என்ற சுலபமான இலக்கை சேசிங் செய்த இந்தியாவுக்கு கேஎல் ராகுல் 2, கில் 7, புஜாரா 6, விராட் கோலி 1 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 45/4 என தடுமாறிய இந்தியாவின் வெற்றிக்கு மேற்கொண்டு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற 4வது நாளில் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட ரிஷப் பண்ட் 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். போதாகுறைக்கு மறுபுறம் போராடிய அக்சர் படேல் 34 ரன்களுக்கு அவுட்டானதால் 74/7 என தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 8வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் 29* ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக 42* ரன்களும் எடுத்து காப்பாற்றினர்.

அதனால் 145/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்யாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா 2 – 0 (2) என்ற கணக்கில் வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் வைட் வாஷ் செய்து இத்தொடரின் கோப்பை வென்றது. அத்துடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்ட இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங்கில் மொத்தமாக 58 ரன்களும் பந்து வீச்சில் 6 விக்கெட்டுகளும் எடுத்து ஆல் ரவுண்டராக செயல்பட்ட தமிழக வீரர் அஷ்வின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

கடந்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி முதன்மை ஸ்பின்னராக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்தியாவுக்கு சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் பேட்டிங்கிலும் 5 சதங்களை அடித்து சில மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். இருப்பினும் இத்தொடரின் முதல் போட்டியில் விக்கெட்டுகளை எடுக்க தவறிய அவர் காலம் கடந்து விட்டதாக நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அத்துடன் சுமாராக செயல்படும் இவருக்காக முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற குல்தீப் யாதவ் நீக்கப்பட்டதாக ஹர்பஜன் சிங் போன்ற சில முன்னாள் வீரர்கள் மறைமுகமாக விமர்சித்தனர்.

ஆனால் இப்போட்டியில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அபாரமாக செயல்பட்டு இந்தியாவை அவமான தோல்வியிலிருந்து காப்பாற்றிய அஷ்வின் தனது தேர்வை பற்றி விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக தெரிவிக்கும் தமிழக ரசிகர்கள் இந்த விருது விமர்சகர்களுக்கு சமர்ப்பணம் என்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே 9 தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ள அஷ்வின் இப்போட்டியில் வென்ற ஆட்டநாயகன் விருதையும் சேர்த்து 9 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.

இதையும் படிங்கஅவங்க 2 பேரும் ரொம்ப நல்லா ஆடுனாங்க – தோல்வி அடைந்தாலும் இந்திய வீரர்களை பாராட்டிய ஷாகிப் அல் ஹசன்

மொத்தம் 18* விருதுகளை பெற்றுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விருதுகளை வென்ற 2வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதில் மற்றொரு பாராட்ட வேண்டிய அம்சம் என்னவெனில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் 200 போட்டிகளில் தான் 19 விருதுகளை வென்றுள்ளார். ஆனால் அஷ்வின் வெறும் 88 போட்டிகளில் 18* விருதுகளை வென்றுள்ளார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்தியாவின் மிகச்சிறந்த மேட்ச் வின்னராக ரவிச்சந்திரன் அஷ்வின் செயல்பட்டு வருவது தமிழக ரசிகர்கள் நெஞ்சை நிமிர்த்தும் விஷயமாகும்.

Advertisement