ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. பின்னர் காபாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் சுமாராக விளையாடிய இந்தியா மழையின் உதவியுடன் டிரா செய்தது. இதைத் தொடர்ந்து 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்குகிறது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில் அடுத்த 2 போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்றாலே ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா ஹாட்ரிக் முறையாக வெல்லும் என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2018/19, 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளை இந்தியா ஏற்கனவே வென்று வரலாறு சாதனை படைத்தது.
ஹாட்ரிக் வெற்றி:
அதனால் கடைசி 2 போட்டிகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தலா 1 வெற்றி பெற்றால் 2 – 2 (5) என்ற கணக்கில் இத்தொடர் சமனில் முடியும். அது போன்ற சூழ்நிலையில் நடப்பு சாம்பியனான இந்தியா பார்டர் – கவாஸ்கர் கோப்பை தக்க வைத்துக் கொள்ளும். அந்த வகையில் 2018/19, 2020/21, 2024/25* ஆகிய அடுத்தடுத்த 3 பார்டர் – கவாஸ்கர் தொடர்களை வென்று ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெறும் என்று ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “3 போட்டிகளுக்கு பின் 1 – 1 என்ற கணக்கில் தொடர் இருப்பதால் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். அதனால் அடுத்த இரண்டில் ஒரு போட்டியில் வென்றாலும் நாங்கள் கோப்பையை தக்க வைத்துக் கொள்வோம். ஏனென்றால் நாங்கள் ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாடிய 2 தொடர்களையும் பெற்றுள்ளோம்”
நல்லதா போச்சு:
“எனவே இது மெல்போர்னில் நாங்கள் சிறப்பாக விளையாடுவதற்கான நல்ல வாய்ப்பாகும். ஆம் கடந்த போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை. ஆனால் தற்போது நாங்கள் முக்கியமான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துகிறோம். முதல் 2 போட்டிகளில் நான் விளையாடவில்லை. அது இங்குள்ள சூழ்நிலைக்குள் என்னை உட்படுத்தி பயிற்சிகளை எடுக்கும் வாய்ப்பை கொடுத்தது”
இதையும் படிங்க: 587 விக்கெட்ஸ்.. என்னோட குருவான அஸ்வின் என்கிட்டயும் சொல்லல.. இது அவங்களுக்கான வாய்ப்பு.. ஜடேஜா உருக்கம்
“அந்த நேரங்களில் இங்குள்ள சூழ்நிலைகளையும் பிட்ச்சில் எப்படி பேட்டிங், பவுலிங் செய்யலாம் என்பதை உணர்வதற்கு நேரம் கிடைத்தது. அது இங்குள்ள சூழ்நிலைகளுக்கு என்னைப் பழக்கப்படுத்தியது. அது காபாவில் நடைபெற்ற கடந்த போட்டியில் 77 ரன்கள் குவிக்க எனக்கு பெரிய உதவியை செய்தது” என்று கூறினார்.



