தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் தற்போது இந்திய அணி வென்றுள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 போட்டி கொண்ட தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இன்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட உள்ளது. இந்த ஆலோசனையில் கோலி ஓய்வு குறித்தும் தோனியின் இடம் குறித்தும் முக்கிய விவாதங்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
அதன்படி கோலிக்கு ஓய்வு கொடுத்தால் டி20 தொடரில் ரோகித் கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளில் ரஹானே கேப்டனாக செயல்படுவார்கள் என்று தெரிகிறது. ஒருவேளை எதிர்பார்த்தபடி கோலிக்கு ஓய்வு தேவைப்படவில்லை என்றால் கோலியே அணியின் கேப்டனாக தொடருவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தோனியின் டி20 இடம் குறித்த முக்கிய ஆலோசனை இன்று நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த டி20 தொடரில் தோனி இடம் பெறாமல் இருந்தால் அவருடைய டி20 வாய்ப்பு இத்துடன் முடிவுக்கு வரும் என்று தோன்றுகிறது.