- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதுவே பெரிய விஷயம்.. 2024 டி20 உ.கோ அணியில் வேண்டுமென்றே கழற்றி விட்டாங்களா? நடராஜன் பதில்

ஐபிஎல் 2024 டி20 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக முதல் 8 போட்டியில் 15 விக்கெட் எடுத்த அவர் 50வது லீக் போட்டியின் முடிவில் பும்ராவை முந்தி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அதற்கான ஊதா தொப்பியையும் தன் வசமாக்கினார்.

ஆனால் அப்படிப்பட்ட அவரை 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு தேர்வு செய்யவில்லை. இத்தனைக்கும் அந்த அணியில் தேர்வாகியுள்ள முகமது சிராஜ், அரஷ்தீப் சிங் ஆகியோரை விட ஐபிஎல் தொடரில் நடராஜன் குறைந்த எக்கனாமியில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அத்துடன் பும்ரா போல துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசும் ஸ்பெஷலிஸ்டாக கருதப்படும் அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

- Advertisement -

வேண்டுமென்றே வாய்ப்பில்லை:
இருப்பினும் அவரை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட தேர்ந்தெடுக்காத தேர்வுக் குழு, கலீல் அஹ்மத் போன்ற வடமாநிலந்து வீரர்களையே தேர்வு செய்துள்ளது. அதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக நடராஜன் தேர்வு செய்யப்படவில்லை என்று பல ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இருமடங்கு சிறப்பாக செயல்பட்டும் வேண்டுமென்றே இந்திய தேர்வுக்குழு புறக்கணிப்பதாக முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் விமர்சித்தார்.

இந்நிலையில் இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் தேர்வுக்கான விவாதத்தில் தம்முடைய பெயர் இருப்பதே பெரிய விஷயம் என்று நடராஜன் கூறியுள்ளார். மேலும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவது தம்முடைய கையில் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “தேர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தையில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதற்காகவே மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”

- Advertisement -

“அதற்காக கடவுளுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். 3 வருடங்கள் கழித்து தேர்வுக் குழுவினர் என்னை தேர்வுக்கு கருதுகின்றனர். என்னுடைய தேர்வை பற்றி இங்கே பேச்சுக்கள் காணப்படுகின்றன. நான் தேர்வு செய்யப்படுகிறேனா இல்லையா என்பது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. இருப்பினும் அதற்கான விவாதத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதே என்னைப் பொறுத்த வரை ஒரு சாதனையாகும்”

இதையும் படிங்க: அவருக்கு மட்டுமில்ல.. மொத்த இந்திய அணிக்கு ஸ்கெட்ச் ரெடி பண்ணிட்டு இருக்கோம்.. பாபர் அசாம் பேட்டி

“ஒரு கட்டிடத்தின் உயரத்திற்கு செல்ல வேண்டுமெனில் நீங்கள் ஒவ்வொரு படியாக அடி எடுத்து வைக்க வேண்டும். தற்போது எனது திட்டங்களை செயல்முறையாக்கி ஹைதராபாத் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துகிறேன். உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படாமல் போனதற்காக நான் டிஸ்டர்ப் ஆகவில்லை. எது நடக்குமோ அது நடக்கும் என்று நான் எப்போதும் நம்புவேன்” எனக் கூறினார்.

- Advertisement -