ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அசத்தலான பவுலிங்கை வெளிப்படுத்திய தமிழக வீரரான நடராஜன் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியின் பேகஅப் பவுலராக தெரிவு செய்யப்பட்டார். பின்னர் டி20 தொடரில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்றிருந்த சைனி ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு வகையான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து சிறப்பாக பயன்படுத்திய நடராஜன் 4 போட்டிகளில் மொத்தம் 8 விக்கெட் எடுத்து அசத்தி விட்டார். மேலும் இனிவரும் போட்டிகளிலும் அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.
சர்வதேச அளவில் தற்போது நடித்து வரும் நடராஜன் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சார்ந்தவர். தனது மகன் கிரிக்கெட்டில் இன்று உலகம் போற்றும் அளவிற்கு ஜொலித்து வரும் வேளையிலும் எந்தவித பரபரப்பும், ஆரவாரமும் இல்லாமல் சாதாரணமாக சின்னப்பம்பட்டி உயர்நிலைப் பள்ளிக்கு எதிரில் அவரது தாய் சாந்தா சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவில் தற்போது கலக்கி வரும் நடராஜனின் ஆட்டத்தை டிவியில் கண்டுகளிக்கும் ரசிகர்கள் அவரது அம்மாவின் கடைக்குச் சென்று அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் தனது மகன் குறித்து பேட்டியளித்த தாய் சாந்தா கூறுகையில் : மகன் பெரிய அளவில் சாதித்து சம்பாதித்தாலும் என்னால் முடிந்த வரை இந்த கடையை நடத்தி வருகிறேன். பழசை மறக்க கூடாது. முன்னெல்லாம் இந்த கடையில் வரும் வருமானம் தான் எங்களை காப்பாற்றியது. ஐ.பி.எல் தொடரில் தேர்வானபோதே நடராஜன் என்னை கடை நடத்தக்கூடாது என்று சொல்லுவான். ஆனா நான் தான் கேட்கல.
இன்னுமும் வாக்குவாதம் நடந்து கொண்டேதான் இருக்கு. ஒரு நாளில் இரண்டு மணி நேரம்தான் இந்த வேலை செய்கிறேன். நான்கு ஜனங்களைப் பார்த்து பழகினால் தான் உடம்பு நல்லா இருக்கும், மனசும் நல்லா இருக்கும். நிறைய புள்ளைங்க கடைக்கு வந்து நீங்க செய்யற வேலையை நிறுத்தாதீங்க. அக்கா கொஞ்ச நாளைக்கு சில்லி சிக்கன் கடை போடுங்க உங்களுக்கு வயசா ஆயிடுச்சி ? அப்படின்னு சொல்றாங்க.
பொண்ணுங்கள கல்யாணம் பண்ணி கொடுக்குற வரைக்குமாவது நான் இந்த சில்லி சிக்கன் கடையை போடுவேன் என்று எளிமையாக கூறினார் நடராஜனின் தாய். உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு வேகப்பந்து வீச்சாளராக மாறிவரும் நடராஜனின் தாய் இவ்வாறு எளிமையாக இருப்பது அந்த பகுதியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.