
இந்த ஆண்டு 14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் போட்டிக்கு போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை வாங்கி வருகின்றனர். மேலும் இந்த ஏலத்தின் முடிவில் எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்பதை பொறுத்தே அணியின் பலம் காணப்படும். அதனால் இந்த வருட ஐ.பி.எல் தொடரின் ஏலத்தினை கூட ரசிகர்கள் போட்டிகளை காண்பதை போல தற்போது மும்முரமாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் கலந்து கொள்வதற்காக தனது பெயரை பதிவு செய்திருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2008 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை விளையாடியவர் சச்சின். இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய லெஜென்டான இவரின் மகன் தற்போது அர்ஜுன் டெண்டுல்கர் இந்த ஐபிஎல் ஏலத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேலும் அவர் எந்த அணியில் எடுக்கப்படுவார் ? என்ற ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஏற்கனவே ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அவரை அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் மூலம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐகானாக விளங்கும் டெண்டுல்கரின் மகன் என்பதால் அவரை எடுத்து இருக்கலாம் என்பதில் ஆச்சரியமில்லை.
இடது கை மீடியம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் பேட்டிங்கும் செய்யக்கூடியவர். அதுமட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சில வருடங்களாக நெட் பவுலராக இருந்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரின்போது மும்பை அணியுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்று நெட் பவுலிங் செய்து வந்தார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடிய அவர் பெரிய அளவு ரன்களை குவிக்க வில்லை.
மேலும் பவுலிங்கிலும் ரன்களை வாரி வழங்கினார். இருப்பினும் மும்பை அணி அவரை எடுத்திருப்பது ரசிகர்களை சற்று வியக்க வைத்துள்ளது. இருப்பினும் சச்சினின் மகன் என்ற ஒரே காரணத்தினால்தான் அவர் எடுக்கப்பட்டுள்ளார் என்றும் சில ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.