இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு நிலவி வந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. மேலும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியையும் அறிவித்துள்ளன.
இந்நிலையில் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி இந்த உலக கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது ? மற்ற அணிகளுக்கு கடுமையான போட்டி கொடுக்கப்போகும் அணி எது ? என்பது போன்ற கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான பிரெண்டன் மெக்கல்லம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் எதிர் அணிகளுக்கு மிகவும் கடுமையான போராட்டத்தை கொடுக்கும் அணியாக ஆஸ்திரேலிய அணியை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் : இந்த டீம் ஷார்ப்பான டீம். அவர்களுடைய பழைய போட்டிகளில் ஏற்பட்ட சறுக்கல்களை எல்லாம் மறந்துவிட்டு பார்த்தால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணி ஒரு கடினமான அணி. ஆகவே இந்த டி20 உலக கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு ஆஸ்திரேலிய அணி கடுமையான போட்டியளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Sharp team. Forget previous struggles, they will be a tough opposition in the upcoming T20 World Cup.
Josh Inglis is some talent 💪🏻@CricketAus @7Cricket @SENZ_Radio pic.twitter.com/MNNVqkqBKk— Brendon McCullum (@Bazmccullum) August 19, 2021
மேலும் ஜோஷ் இங்கிலீஸ் ஒரு நல்ல டேலண்ட் பிளேயர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஐந்து t20 தொடரை இழந்து உள்ள ஆஸ்திரேலிய அணி கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் ஒரே போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான தோல்வியை சந்தித்தது.
ஆனாலும் கிளன் மேக்ஸ்வெல், வார்னர், கம்மின்ஸ், ஸ்மித், பின்ச் போன்ற வீரர்கள் அணியில் இல்லாததே அந்த தோல்விக்கு காரணம் என்றும் அவர்கள் மீண்டும் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி உள்ளதால் உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணியாக காணப்படும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.