இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது டி20 போட்டி இன்று மவுண்ட் மாங்கனியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கடந்த போட்டியில் இந்திய அணிக்காக ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த மணீஷ் பாண்டே தற்போது இணையதளத்திற்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியில் நான் எங்கு இறங்க வேண்டும் என்ற சாய்ஸ் எனக்கு இல்லை. ஏனெனில் டாப் ஆர்டரில் அனைவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். எனவே எனக்கு 5 அல்லது 6 ஆம் இடத்தில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
5 அல்லது 6 ஆவது இடத்தில் ஆடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இருப்பினும் அணி நிர்வாகம் எனக்கு ஆறாவது இடத்தை வழங்கியுள்ளது. முன்கூட்டியே நான் இறங்கினால் எனக்கு களத்தில் நின்று பந்துகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தற்போது பின்வரிசையில் இறங்கி வருவதால் இறங்கியவுடன் சிறப்பாக ஆட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆனால் நான்காவது போட்டியை பொறுத்தவரை எனக்கு முன்கூட்டியே இறங்கும் வாய்ப்பு கிடைத்தது. டாப் ஆர்டர் சரிந்ததால் நான் முன்கூட்டியே இறங்கினேன்.
எனவே இந்த போட்டியில் நான் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் அளிக்கமுடியும் என்று கருதி என்னுடைய இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி எனது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் என்னை பொறுத்தவரை இந்த ஆறாவது இடத்தில் இறங்குவதும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அணி இக்கட்டான சூழ்நிலையில் என்னால் அந்த இடத்தில் பங்களிக்க முடியும் என்று நினைக்கிறேன். இதற்காக கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன். இந்திய அணியில் 6-வது வீரராக இறங்கினாலும் ஐபிஎல் போட்டிகளில் மூன்றாவது வீரராகவே இறங்குவேன்.
எனக்கு இந்திய அணியில் எந்த இடத்தில் விளையாடினாலும் மகிழ்ச்சிதான் என்று சற்று புலம்பியபடியே அவர் பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அணியின் நான்காவது வீரராக சில போட்டிகளில் மனிஷ் பாண்டே பரிசோதிக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த இடத்தில் ரன் குவிக்க தவறியதால் அந்த இடம் அவரிடமிருந்து பறிபோனது. இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து தனது சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாண்டே தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.