மீண்டும் மிகசிறந்த கம்பேக் கொடுத்து உலக சாதனை படைத்த குல்தீப் யாதவ் – இனியாவது தொடர் வாய்ப்பு கிடைக்குமா?

Kuldeep-1
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஜனவரி 12ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியிலும் 4 விக்கெட் போராடி வென்று 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் சனாக்கா 2, அஸலங்கா 15, டீ சில்வா 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக நுவனிடு பெர்னான்டோ 50 ரன்கள் எடுத்தார்.

IND vs SL Rahul Rohit

- Advertisement -

இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 216 ரன்களை துரத்திய இந்தியாவும் ரோகித் சர்மா 17, கில் 21, விராட் கோலி 4, ஸ்ரேயாஸ் ஐயர் 28 என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் இழந்து 86/4 என தடுமாறியது. இருப்பினும் 5வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த ஹர்திக் பாண்டியா 36 (53) ரன்களும் கேஎல் ராகுல் 64* (103) ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

அபார சாதனை:
கூடவே அக்சர் படேல் 21 (21), குல்தீப் யாதவ் 10* (10) ரன்களும் எடுத்த உதவியுடன் 43.2 ஓவரிலேயே 219/6 ரன்களை எடுத்து வென்ற இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்து 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது. இந்த வெற்றிக்கு 10 ஓவரில் 51 ரன்களை மட்டும் கொடுத்து கேப்டன் சனாக்கா உள்ளிட்ட 3 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து பேட்டிங்கிலும் 10* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த இவர் கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2018 வாக்கில் முதன்மை ஸ்பின்னராக அவதரித்தார். ஆனால் 2019 உலக கோப்பையில் தடுமாறிய அவர் ஐபிஎல் தொடரிலும் அடிவாங்கி ஃபார்மை இழந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா மற்றும் கொல்கத்தா அணியில் கழற்றி விடப்பட்டார். இடையே காயத்தை சந்தித்தாலும் மனம் தளராமல் போராடிய அவர் 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அற்புதமாக செயல்பட்டு இந்தியாவுக்காக மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 22 மாதங்கள் கழித்து கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளையும் 40 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்று அற்புதமான கம்பேக் கொடுத்த அவர் அடுத்த போட்டியிலேயே காரணமின்றி நியாயமின்றி அதிரடியாக நீக்கப்பட்டது அனைவரையும் ஏமாற்றமடைய வைத்தது.

Kuldeep Yadav 1

இருப்பினும் அதற்காக துவளாமல் பெஞ்சில் காத்திருந்து இப்போட்டியில் கிடைத்த வாய்ப்பில் அற்புதமாக செயல்பட்டு மீண்டும் ஆட்டநாயகன் விருது வென்றுள்ள அவர் 34 டெஸ்ட், 122 ஒருநாள், 44 டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தம் 200* விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். குறிப்பாக இடது கை மணிக்கட்டு ஸ்பின்னராக விளையாடும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் இடது கை மணிகட்டு ஸ்பின்னர் என்ற தனித்துவமான உலக சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்களில் ஆஸ்திரேலியாவின் ப்ராட் ஹாக் அதிகபட்சமாக 180 விக்கெட்களை எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவின் யாராலும் மறக்க முடியாத பால் ஆடம்ஸ் 163 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சைனாமேன் எனப்படும் வித்தியாசமான ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் குல்தீப் யாதவ் ஏற்கனவே அண்டர் 19 உலக கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை ஹாட்ரிக் எடுத்த ஒரே இந்திய வீரர் ஆகிய வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.

இதையும் படிங்க:
IND vs SL : இந்திய அணிக்கு எதிரான இந்த தோல்விக்கு காரணமே இதுதான் – இலங்கை கேப்டன் ஷனகா பேட்டி
அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடும் தகுதியை செயல்படுத்தி வரும் இவருக்கு சாதாரண இருதரப்பு தொடர்களிலேயே நிலையான வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

Advertisement