ரஹானேவின் கேப்டன்சியில் முதல் நாள் ஆட்டத்தை கண்ட கோலி என்ன சொல்லியிருக்காரு தெரியுமா ? – விவரம் இதோ

Rahane
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பாக்சிங் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது முதல் நாள் ஆட்டநேரம் முடிவதற்கு முன்பாக தங்களது முதல் இன்னிங்சை முடித்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

bumrah

- Advertisement -

அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி இளம் வீரரான மார்னஸ் லாபுஷேன் 48 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 38 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அறிமுக வீரர் முகமது சிராஜ் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இந்திய அணி பந்து வீச்சாளர்களின் இந்த சிறப்பான பந்துவீச்சு தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் ரஹானேவின் கேப்டன்சியும் அதிகளவு பாராட்டுகளை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் கூட தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரஹானேவின் கேப்டன்ஷிப் குறித்து மனம்திறந்து புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Sehwag

இந்நிலையில் முதல் போட்டி முடிந்து நாடு திரும்பிய விராட்கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த இரண்டாவது போட்டியின் முதல் நாள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : முதல் நாள் ஆட்டம் டாப்பாக இருந்தது. பவுலர்கள் அனைவரும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் முதல் நாள் முடிவில் சாலிட் ஆன பினிஷ் கிடைத்தது என்று பாராட்டியுள்ளார்.

ஏற்கனவே கோலி வெளியேறியதால் இந்திய அணி தடுமாறும் என்று பலரும் கூறி வந்த நிலையில் ரஹானே தனது கேப்டன்சி கையிலெடுத்து சிறப்பாக இந்திய அணியை இதுவரை வழி நடத்தியுள்ளார். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை 200 ரன்களுக்குள் சுருட்டியதால் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடித்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் துவக்க வீரர் கில் சிறப்பாக ஆடி வருவதால் நாளை இன்னும் அவர் நிறைய ரன்களை அடிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement